குமாரபாளையத்தில் மதுக்கடை முன்பு தி.மு.க.வினர் முற்றுகை 24 மணி நேரமும் மது விற்பதாக புகார்


குமாரபாளையத்தில் மதுக்கடை முன்பு தி.மு.க.வினர் முற்றுகை 24 மணி நேரமும் மது விற்பதாக புகார்
x
தினத்தந்தி 11 July 2019 10:15 PM GMT (Updated: 11 July 2019 8:36 PM GMT)

குமாரபாளையத்தில் மதுக்கடை முன்பு தி.மு.க.வினர் முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் 24 மணி நேரமும் மது விற்கப்படுவதாக புகார் தெரிவித்தனர்.

குமாரபாளையம், 

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகரில் 7 அரசு மதுபான கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த மதுக்கடைகளில் விதிமுறைகளை மீறி 24 மணி நேரமும் பார்கள் இயங்கி வருவதாகவும், எந்த நேரமும் மது விற்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன. எனவே இந்த மது பார்களை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க. சார்பில் குமாரபாளையம் போலீஸ் நிலையம் மற்றும் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டது.

ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதை கண்டித்தும், மதுக்கடை பார்களை மூடக்கோரியும் தி.மு.க.வினர் நேற்று காலை குமாரபாளையம் - எடப்பாடி ரோட்டில் உள்ள மதுக்கடை முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் நாமக்கல் மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் சேகர் மற்றும் நகர செயலாளர் வெங்கடேஷ் தலைமையில் பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோரும், காங்கிரசாரும் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து தி.மு.க.வினர் கூறியதாவது:- குமாரபாளையத்தில் ஏராளமான விசைத்தறி தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் 24 மணி நேரம் செயல்படும் மதுக்கடை பார்களில் மது வாங்கி குடித்துக்கொண்டு வேலைக்கு செல்வது கிடையாது. இதனால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன.

எனவே சட்ட விரோதமாக திறந்து இருக்கும் மதுக்கடை பார்களை மூடவேண்டும். தாராளமாக மது கிடைப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் நாங்கள் போராட்டம் நடத்தினோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் குமாரபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் போலீசாரின் முன் அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்துவதாக கூறி தி.மு.க.வினரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டனர். இதற்கு தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அப்போது நாமக்கல் மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் சேகர் மற்றும் சிலரை போலீசார் குண்டு கட்டாக தூக்கி வந்து போலீஸ் வேனில் ஏற்ற முயன்றனர். ஆனால் அவர்கள் போலீசாரின் பிடியில் இருந்து நழுவி வந்து மீண்டும் மதுக்கடை முன்பு அமர்ந்து கோஷங்களை எழுப்பினர். அப்போது அவர்கள் கைது நடவடிக்கையை கண்டித்து போலீசாருக்கு எதிராக கோஷம் போட்டனர். மேலும் போலீசாருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பும், பதற்றமும் உண்டானது.

இதையடுத்து திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகம் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும் தி.மு.க.வினர் தங்கள் போராட்டத்தை கைவிட மறுத்து தொடர்ந்து முற்றுகையில் ஈடுபட்டனர்.

பின்னர் துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகம், நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசிடம் போனில் தொடர்பு கொண்டு போராட்டத்தை குறித்து விளக்கினார். உடனே போலீஸ் சூப்பிரண்டு போராட்டம் நடத்திய தி.மு.க.வினருடன் செல்போனில் பேச்சுவார்த்தை நடத்தி, அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டும் டாஸ்மாக் கடைகளில் மது விற்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து தி.மு.க.வினர் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் சுமார் 3 மணி நேரம் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.

Next Story