மைசூருவில் இருந்து புதிதாக ஐதராபாத், கொச்சி, கோவாவுக்கு விமான சேவை வருகிற 19-ந் தேதி முதல் இயங்குகிறது


மைசூருவில் இருந்து புதிதாக ஐதராபாத், கொச்சி, கோவாவுக்கு விமான சேவை வருகிற 19-ந் தேதி முதல் இயங்குகிறது
x
தினத்தந்தி 11 July 2019 10:00 PM GMT (Updated: 11 July 2019 9:03 PM GMT)

மைசூருவில் இருந்து புதிதாக ஐதராபாத், கொச்சி, கோவா ஆகிய இடங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட உள்ளன. இந்த விமான சேவைகள் வருகிற 19-ந் தேதி முதல் தொடங்குகின்றன.

மைசூரு, 

மைசூருவில் இருந்து புதிதாக ஐதராபாத், கொச்சி, கோவா ஆகிய இடங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட உள்ளன. இந்த விமான சேவைகள் வருகிற 19-ந் தேதி முதல் தொடங்குகின்றன.

புதிதாக விமான சேவை

மைசூருவில் இருந்து ஐதராபாத், கொச்சி, கோவா ஆகிய இடங்களுக்கு வருகிற 19-ந் தேதி முதல் புதிதாக விமான சேவை தொடங்கப்பட உள்ளது. இதுதொடர்பாக நேற்று மைசூரு விமான நிலைய இயக்குனர் மஞ்சுநாத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மைசூரு மண்டகள்ளியில் விமான நிலையம் அமைந்துள்ளது. அங்கிருந்து ஏற்கனவே பெங்களூரு மற்றும் சென்னைக்கு பயணிகள் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மைசூருவில் இருந்து புதிதாக ஐதராபாத், கோவா, கொச்சி ஆகிய இடங்களுக்கு விமானங்களை இயக்க திட்டமிடப்பட்டது. அதற்கான பணிகள் முடிவடைந்து வருகிற 19-ந் தேதி முதல் ஐதராபாத் உள்ளிட்ட ஊர்களுக்கு விமானங்கள் இயக்கப்பட உள்ளன.

ஐதராபாத்துக்கு விமானம்

வருகிற 19-ந் தேதி அன்று தனது முதல் சேவையை ஐதராபாத்தில் இருந்து இந்த விமானம் தொடங்குகிறது. அன்று காலை 8.15 மணிக்கு ஐதராபாத்தில் இருந்து புறப்படும் இந்த விமானம் காலை 9.15 மணிக்கு கொச்சியை சென்றடைகிறது. பின்னர் காலை 10.10 மணிக்கு கொச்சியில் இருந்து புறப்படும் அந்த விமானம் காலை 11.40 மணிக்கு மைசூரு மண்டகள்ளி விமான நிலையத்தை வந்தடைகிறது. பின்னர் மைசூருவில் இருந்து மதியம் 3.20 மணிக்கு கோவாவுக்கு விமானம் இயக்கப்படுகிறது. மதியம் 3.20 மணிக்கு மைசூருவில் இருந்து புறப்படும் அந்த விமானம் மதியம் 4.50 மணிக்கு கோவாவை சென்றடைகிறது.

அதே விமானம் கோவாவில் இருந்து மாலை 5.20 மணிக்கு புறப்பட்டு மைசூருவை மாலை 6.50 மணிக்கு வந்தடைகிறது. பின்னர் இரவு 7.20 மணிக்கு மைசூருவில் இருந்து ஐதராபாத்துக்கு விமானம் இயக்கப்படுகிறது.

தினமும் இயங்கும்

இரவு 7.20 மணிக்கு மைசூரு மண்டகள்ளியில் இருந்து புறப்படும் அந்த விமானம் இரவு 9.05 மணிக்கு ஐதராபாத்தை சென்றடைகிறது. பின்னர் அந்த விமானம் 20-ந் தேதி அன்று காலை 6.05 மணிக்கு ஐதராபாத்தில் இருந்து புறப்பட்டு காலை 7.50 மணிக்கு மைசூரு மண்டகள்ளி விமான நிலையத்தை வந்தடைகிறது. அதன்பின்னர் இந்த விமானங்கள் கொச்சி, கோவா, ஐதராபாத் ஆகிய ஊர்களுக்கு மைசூருவில் இருந்து வழக்கம்போல் தினமும் இயங்கும்.

இந்த புதிய விமான சேவைகள் மைசூருவில் சுற்றுலா மற்றும் தொழில் வளர்ச்சிகளுக்கு உறுதுணையாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story