பவானிசாகர் அருகே வேலியில் இருந்த 100 தூண்களை பிடுங்கி எறிந்த ஒற்றை யானை


பவானிசாகர் அருகே வேலியில் இருந்த 100 தூண்களை பிடுங்கி எறிந்த ஒற்றை யானை
x
தினத்தந்தி 11 July 2019 10:45 PM GMT (Updated: 11 July 2019 9:41 PM GMT)

பவானிசாகர் அருகே வேலியில் இருந்த 100 தூண்களை பிடுங்கி எறிந்து அட்டகாசம் செய்த ஒற்றை யானையை ஒரு மணி நேரம் போராடி வனத்துறையினர் காட்டுக்குள் விரட்டினார்கள்.

புஞ்சைபுளியம்பட்டி,

புஞ்சைபுளியம்பட்டி அருகே விளாமுண்டி வனப்பகுதி உள்ளது. இங்கு ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. தற்போது மழை இல்லாமல் வனப்பகுதியில் உள்ள குட்டைகள் வற்றிவிட்டன. அதனால் தண்ணீரை தேடியும், தீவனத்துக்காகவும் அடிக்கடி யானைகள் வனப்பகுதியை விடு வெளியேறி அருகே உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்கின்றன. இதை தடுப்பதற்காக விவசாயிகள் பலர் 5 அடிக்கு ஒரு தூண் கல் நட்டு கம்பி வேலி போட்டுள்ளார்கள்.

இந்தநிலையில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் விளாமுண்டி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு யானை பவானிசாகர் அருகே உள்ள நால்ரோடு பகுதிக்கு சென்றது.

அதன்பின்னர் நால்ரோட்டில் உள்ள ராஜேஷ் என்பவருக்கு சொந்தமான தோட்டத்துக்கு வந்தது. தோட்டத்தை சுற்றிலும் ராஜேஷ் கம்பி வேலி போட்டுள்ளார். தற்போது பயிர் ஏதும் செய்யாத நிலையில் நிலத்தில் உழவுப்பணி மட்டும் செய்திருந்தார்.

தீவனத்தை தேடி வந்த யானை பயிரில்லாததை கண்டு ஆத்திரமடைந்து கம்பி வேலிகளை துதிக்கையால் பிடித்து ஆட்டியது. பின்னர் பிளிறியபடியே வேலியில் இருந்த 100 தூண்களை சாய்த்து, பிடுங்கி எறிந்தது.

சத்தம் கேட்டு ராஜேஷ் விவசாயிகள் சிலரை உதவிக்கு அழைத்துக்கொண்டு ஓடிவந்தார். இதுகுறித்து பவானிசாகர் வனத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த வனத்துறையினர் பட்டாசு வெடித்து சுமார் 1 மணி நேரம் போராடி அதிகாலை 5 மணி அளவில் யானையை காட்டுக்குள் விரட்டி அடித்தார்கள்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயி ராஜேஷ் கூறுகையில், ‘யானையிடம் இருந்து பயிர்களை காப்பாற்ற கம்பி வேலி அமைத்தோம். ஆனால் கம்பி வேலிகளை யும் யானை சேதப்படுத்திவிட்டது. இதற்கு உரிய இழப்பீட்டை வனத்துறையினர் பெற்றுத்தரவேண்டும்‘ என்றார்.

Next Story