அம்பர்நாத்தில் மனைவி கழுத்தை நெரித்து கொலை போலீசாரை வீட்டுக்கு வரவழைத்து கணவர் சரண் அடைந்தார்


அம்பர்நாத்தில் மனைவி கழுத்தை நெரித்து கொலை போலீசாரை வீட்டுக்கு வரவழைத்து கணவர் சரண் அடைந்தார்
x
தினத்தந்தி 11 July 2019 10:45 PM GMT (Updated: 11 July 2019 10:37 PM GMT)

தனது சகோதரி மகன் திருமணத்துக்கு வர மறுத்த மனைவியை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கணவர் கொலை செய்தார். பின்னர் அவர் போலீசாரை வீட்டுக்கு வரவழைத்து சரண் அடைந்தார்.

தானே, 

தனது சகோதரி மகன் திருமணத்துக்கு வர மறுத்த மனைவியை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கணவர் கொலை செய்தார். பின்னர் அவர் போலீசாரை வீட்டுக்கு வரவழைத்து சரண் அடைந்தார்.

அடிக்கடி சண்டை

தானே மாவட்டம் அம்பர்நாத் பகுதியை சேர்ந்தவர் தீபக் சுக்லால் (வயது 41). இவரது மனைவி ரூபாலி (40). இவர்களுக்கு 9 வயதில் மகளும், 2 வயதில் மகனும் உள்ளனர். கணவர், மனைவி இருவருக்கும் இடையே சிறு பிரச்சினைகளுக்கு கூட அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.

இந்தநிலையில், நேற்று முன்தினம் தீபக் சுக்லால் மற்றும் மனைவி ரூபாலி வீட்டில் இருந்தனர். மகள் பள்ளிக்கு சென்றுவிட்டாள். மகன் வீட்டின் மற்றொரு அறையில் தூங்கி கொண்டு இருந்தான்.

அப்போது கணவர் தீபக் சுக்லால், ஜல்காவில் நடைபெறும் தனது சகோதரி மகனின் திருமணத்திற்கு மனைவியை அழைத்துள்ளார். ஆனால் ரூபாலி திருமணத்திற்கு வர மறுத்தார். இது தொடர்பாக அவர்கள் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது.

கழுத்தை நெரித்து கொன்றார்

அப்போது ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற தீபக் சுக்லால் மனைவி என்றும் பாராமல் அவர் அணிந்திருந்த துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

பின்னர் அவர் சிவாஜி நகர் போலீசாருக்கு போன் செய்து நடந்த சம்பவத்தை அழுதுகொண்டே தெரிவித்தார். தனது 2 வயது மகன் தூங்கி கொண்டு இருப்பதால் அவனை தனிமையில் விட்டு விட்டு போலீஸ் நிலையத்துக்கு வந்து சரண் அடைய இயலாது என தெரிவித்தார்.

கைது

தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் ரூபாலியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரிடம் தீபக் சுக்லால் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தீபக் சுக்லாலிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குழந்தைகளை அவர்களது மாமா வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

Next Story