கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை மாற்றுத்திறனாளிகள் முற்றுகை சுகாதார வளாகத்தை சீரமைக்க கோரிக்கை


கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை மாற்றுத்திறனாளிகள் முற்றுகை சுகாதார வளாகத்தை சீரமைக்க கோரிக்கை
x
தினத்தந்தி 12 July 2019 9:45 PM GMT (Updated: 12 July 2019 6:18 PM GMT)

சுகாதார வளாகத்தை சீரமைக்க வலியுறுத்தி, கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை மாற்றுத்திறனாளிகள் முற்றுகையிட்டனர்.

கோவில்பட்டி, 

சுகாதார வளாகத்தை சீரமைக்க வலியுறுத்தி, கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை மாற்றுத்திறனாளிகள் முற்றுகையிட்டனர்.

குறை தீர்க்கும் கூட்டம்

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குறை தீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் சூரியகலா தலைமை தாங்கி, மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கேட்டு, 11 மனுக்களை வழங்கினர்.

இதற்கிடையே வக்கீல் நீதிபாண்டியன் தலைமையில் மாற்றுத்திறனாளிகள், கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை மனு வழங்கினர். அதில், கோவில்பட்டி அண்ணா பஸ் நிலைய வளாகத்தில் உள்ள ஆண், பெண் மாற்றுத்திறனாளிகளுக்கான சுகாதார வளாகம் சேதப்படுத்தப்பட்டு உள்ளதால், அவற்றை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே அந்த சுகாதார வளாகத்தை சீரமைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

பேச்சுவார்த்தை

முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், கோவில்பட்டி நகரசபை என்ஜினீயர் சரவணன், வருவாய் ஆய்வாளர் கருப்பசாமி பாண்டியன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தில் ஆண், பெண் மாற்றுத்திறனாளிகளுக்கான சுகாதார வளாகம் இன்னும் 15 நாட்களுக்குள் சீரமைக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்ற னர்.

Next Story