நாகை மாவட்டத்தில், குடிமராமத்து பணிகள் நடைபெற உள்ள இடங்களை சிறப்பு அதிகாரி ஆய்வு


நாகை மாவட்டத்தில், குடிமராமத்து பணிகள் நடைபெற உள்ள இடங்களை சிறப்பு அதிகாரி ஆய்வு
x
தினத்தந்தி 12 July 2019 11:00 PM GMT (Updated: 12 July 2019 6:39 PM GMT)

நாகை மாவட்டத்தில் குடிமராமத்து பணிகள் நடைபெற உள்ள இடங்களை சிறப்பு அதிகாரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை சார்பில் நடப்பாண்டில் குடிமராமத்து பணிகளை செயல்படுத்துவது தொடர்பாக பாசன சங்கங்களை சேர்ந்த விவசாயிகளை சந்தித்து பொதுப்பணித்துறை கூடுதல் செயலாளரும் (பாசனம்) மற்றும் குடிமராமத்து பணிகள் திட்டம் சிறப்பு அதிகாரியுமான பாலாஜி கருத்துகளை கேட்டறிந்தார். அப்போது மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் உடனிருந்தார்.

இதை தொடர்ந்து நாகை மாவட்டத்தில் குடிமராமத்து பணிகள் நடைபெற உள்ள இடங்களான கோகூர், பாலக்குறிச்சி, மேல ஈசனூர், ஆலங்குடி, திருப்பூண்டி, வெண்மணச்சேரி, வாட்டாக்குடி, வேட்டைக்காரனிருப்பு உள்ளிட்ட கிராமங்களில் சிறப்பு அதிகாரி பாலாஜி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அப்பகுதியில் உள்ள பாசன சங்கங்களை சேர்ந்த விவசாயிகளை சந்தித்து, சங்கங்களில் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களையும் கேட்டறிந்தார். ஆய்வின் போது பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் சண்முகநாதன், செயற்பொறியாளர் திருவேட்டைச்செல்வம், உதவி செயற்பொறியாளர்கள் ஆசைத்தம்பி, பாண்டியன், உதவி பொறியாளர்கள் கண்ணப்பன், கமலக்கண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜ், செல்வராஜ் உட்பட அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story