விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் கதிரவன் தகவல்


விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் கதிரவன் தகவல்
x
தினத்தந்தி 12 July 2019 10:15 PM GMT (Updated: 12 July 2019 7:22 PM GMT)

விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளார்.

ஈரோடு,

ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

மத்திய அரசின் பயிர் காப்பீடு திட்டம் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டில் இந்த திட்டத்தில் காரீப் பருவத்துக்கு ஈரோடு மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட கிராமங்கள், வேளாண்மை பயிர்கள், தோட்டக்கலை பயிர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

இந்த திட்டத்தில் விதைப்பு செய்ய இயலாமை, விதைப்பு பொய்த்து போதல், விதைப்பு முதல் அறுவடை வரை உள்ள காலத்திலும், அறுவடைக்கு பின்னும் ஏற்படும் இழப்பு, புயல், மழை, மண்சரிவு, வெள்ளம் போன்ற இடர்பாடுகளால் ஏற்படும் இழப்புக்கும் காப்பீடு செய்து கொள்ளலாம். மேலும், இந்த ஆண்டு முதல் ஈரோடு மாவட்டம் தொகுப்பு 6-ன் கீழ் ஓரியண்டல் காப்பீடு நிறுவனத்தின் மூலம் பயிர் காப்பீடு செய்யப்பட உள்ளது.

நடப்பு காரீப் பருவத்துக்கு வேளாண்மை பயிர்களை பொறுத்தவரையில் மக்காச்சோளம், துவரை, உளுந்து, நிலக்கடலை ஆகிய பயிர்கள் வருவாய் கிராம அளவிலும், ராகி, எள் ஆகிய பயிர்கள் பிர்க்கா அளவிலும் அறிவிக்கப்பட்டு உள்ளது. தோட்டக்கலை பயிர்களில் வாழை, மரவள்ளிக்கிழங்கு, வெங்காயம், மஞ்சள், வெண்டைக்காய், முட்டைக்கோஸ், உருளைக்கிழங்கு, மாமரம், கொய்யா மரம் ஆகியவற்றுக்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதுதொடர்பான சந்தேகங்களை அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி விவசாயிகள் அறிந்து கொள்ளலாம்.

வணிக வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க்கடன் பெறும் விவசாயிகள் கட்டாயமாக இந்த திட்டத்தில் பதிவு செய்யப்படுவார்கள். பயிர்க்கடன் பெறாத விவசாயிகள் மாவட்டத்தில் உள்ள பொது இ-சேவை மையம் மூலமாகவோ, வங்கிகள் மூலமாகவோ விருப்பத்தின் பெயரில் பதிவு செய்து கொள்ளலாம்.

வேளாண்மை பயிர்களை பொறுத்தவரையில் ஒரு ஏக்கர் மக்காச்சோள பயிருக்கு ரூ.528, துவரை, உளுந்து பயிருக்கு ரூ.311, நிலக்கடலை பயிருக்கு ரூ.555, ராகி, எள் ஆகிய பயிர்களுக்கு ரூ.246 காப்பீடு கட்டணமாக செலுத்த வேண்டும். தோட்டக்கலை பயிர்களை பொறுத்த வரையில் ஒரு ஏக்கர் வாழைக்கு ரூ.4 ஆயிரத்து 21, மரவள்ளிக்கிழங்கு பயிருக்கு ரூ.1,655, வெங்காய பயிருக்கு ரூ.1,885, மஞ்சள் பயிருக்கு ரூ.3 ஆயிரத்து 641, வெண்டைக்காய் பயிருக்கு ரூ.491, முட்டைக்கோஸ் பயிருக்கு ரூ.911, உருளைக்கிழங்கு பயிருக்கு ரூ.2 ஆயிரத்து 129, கொய்யாவுக்கு ரூ.1,087, மாமரத்துக்கு ரூ.1,003 காப்பீடு கட்டணமாக செலுத்த வேண்டும்.

காப்பீடு செய்ய நில ஆவணங்களான சிட்டா, அடங்கல், வங்கிக்கணக்கு புத்தக நகல், ஆதார் அடையாள அட்டை நகல், கிராம நிர்வாக அதிகாரியிடம் ‘விதைப்பு செய்ய இருக்கிறார்’ என்ற விதைப்பு சான்று ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். இதில் விவசாயிகள் காப்பீடு தொகையை மட்டும் செலுத்தினால் போதுமானது.

பதிவு செய்யவோ அல்லது வேறு எந்த கட்டணமும் செலுத்தவோ தேவையில்லை. குறிப்பாக பொது இ-சேவை மையங்களில் ஆவணங்களை ஸ்கேன் செய்ய கூடுதல் தொகை வசூலிப்பதாக புகார் வருகின்றன. அங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. மீறினால் சம்பந்தப்பட்ட பொது இ-சேவை மையத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டு குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

வெண்டைக்காய் பயிருக்கு வருகிற ஆகஸ்டு மாதம் 31-ந் தேதியும், மற்ற அனைத்து பயிர்களுக்கும் வருகிற செப்டம்பர் மாதம் 30-ந் தேதி வரையும் பயிர் காப்பீடு செய்யலாம். எனவே இந்த திட்டத்தில் அனைத்து விவசாயிகளும் பதிவு செய்து பயன்அடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் கூறிஉள்ளார்.

Next Story