ராமேசுவரத்தில் தொடர் மின்வெட்டை கண்டித்து நூதனமுறையில் ஆர்ப்பாட்டம்


ராமேசுவரத்தில் தொடர் மின்வெட்டை கண்டித்து நூதனமுறையில் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 July 2019 10:45 PM GMT (Updated: 12 July 2019 7:45 PM GMT)

தொடர் மின்வெட்டை கண்டித்து ராமேசுவரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நூதனமுறையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ராமேசுவரம்,

ராமேசுவரம் தீவு பகுதி முழுவதும் கடந்த 3 நாட்களாக இரவு முழுவதும் தொடர் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இரவு ஏற்படும் மின்வெட்டானது மறுநாள் மதியம் 1 மணிக்கு சரிசெய்யப்பட்டு மீண்டும் மின்வினியோகம் செய்யப்படுகிறது. தொடர் மின்வெட்டால் ராமேசுவரம் தீவு பகுதியில் உள்ள பள்ளி மாணவ-மாணவிகள் கடும் அவதியடைந்தனர். நிம்மதியான தூக்கம் இல்லாமல் மக்கள் கடும் அவதியடைந்தனர். இந்த நிலையில் ராமேசுவரம் பகுதியில் ஏற்பட்டு வரும் தொடர் மின் வெட்டை கண்டித்தும், மின்சார வாரியத்தை கண்டித்தும்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பஸ் நிலையம் எதிரில் நூதன முறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் டி.வி., மிக்சி, கிரைண்டர் ஆகிய மின்சாதன பொருட்களை வைத்து அதற்கு மாலை அணிவித்து அதன் முன்பு கையில் பிளாஸ்டிக் விசிறியை வைத்து வீசுவது போல் சட்டையில்லாமல் பனியனுடன் நின்று நூதன முறையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கருணாகரன், தாலுகா செயலாளர் சிவா, தாலுகா குழு உறுப்பினர்கள் கருணாமூர்த்தி, அசோக், ஜேம்ஸ்ஜஸ்டின், ஆரோக்கிய நிர்மலா, கிளை செயலாளர்கள் முத்துமாரி, தர்மா, வெங்கடேசுவரி, இளைஞர் பெருமன்ற தாலுகா செயலாளர் கார்த்திக் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Next Story