பி.எஸ்.என்.எல். சேவை குறைபாட்டை சரிசெய்ய கோரிக்கை


பி.எஸ்.என்.எல். சேவை குறைபாட்டை சரிசெய்ய கோரிக்கை
x
தினத்தந்தி 12 July 2019 10:45 PM GMT (Updated: 12 July 2019 7:58 PM GMT)

அழகன்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பி.எஸ்.என்.எல். சேவை குறைபாட்டை சரிசெய்ய வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்களை சேர்ந்த பொதுமக்கள் பி.எஸ்.என்.எல். தொலைபேசி மற்றும் செல்போன் சேவை களையே பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக மாவட்டத்தின் கிழக்கு பகுதியில் உள்ள தேவிபட்டினம், சித்தார்கோட்டை, வாழூர், அத்தியூத்து, பனைக்குளம், அழகன்குளம், ஆற்றங்கரை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் பெரும்பாலும் வெளிநாடுகள் மற்றும் வெளியூர்களில் வேலை பார்த்து வருவதால் குடும்பத்தினரை தொடர்பு கொள்வதற்கு செல்போன், தொலைபேசிகளையே நம்பி உள்ளனர். இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக பி.எஸ்.என்.எல். சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான நேரங்களில் செல்போன் சிக்னலில் தடை ஏற்படுகிறது. மேலும் இன்டர்நெட் முற்றிலுமாக கிடைக்கவில்லை. இதனால் பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது அழகன்குளம் கிராமத்தில் தொலைபேசி இணைப்புகள் பெரும்பாலும் செயல்படு வதில்லை. பி.எஸ்.என்.எல். சேவை குறைபாட்டை சரிசெய்ய வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து ஐக்கிய முஸ்லிம் ஜமாத்துகள் சபை செயலாளர் பக்ருல்அமின் கூறியதாவது:-

அழகன்குளம் கிராமத்திற்கு முன்பு பெருங்குளம் தொலைபேசி நிலையத்தில் இருந்து இணைப்புகள் கொடுக்கப்பட்டன. பின்பு இணைப்புகள் அதிகமானதை தொடர்ந்து பழுது ஏற்பட்டால் அதனை சரி செய்வதற்கு காலதாமதம் ஏற்பட்டது. இதையடுத்து அழகன்குளம் முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகள் முயற்சி மேற்கொண்டு ஜமாத்துக்கு சொந்தமான கட்டிடத்தில் தொலைபேசி நிலையம் செயல்பட ஏற்பாடு செய்தனர். இதன் மூலம் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட இணைப்புகள் கொடுக்கப்பட்டன. காலப்போக்கில் ஊழியர் பற்றாக்குறை, பழுது பார்ப்பதில் காலதாமதம் போன்ற காரணங்களினால் பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் தனியார் சேவைக்கு மாறி விட்டனர். இதனால் தற்போது 200 இணைப்புகள் மட்டுமே உள்ளது. அதிலும் மின்தடை ஏற்பட்டால் தொலைபேசி, செல்போன், இன்டர்நெட் போன்ற சேவைகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றி விசாரித்ததில் இந்த பகுதிக்கு தேவிபட்டினத்தில் இருந்து கேபிள் வருவதாகவும், அங்கு பழுது ஏற்பட்டால் இந்த பகுதியில் எந்த இணைப்பும் செயல்படாது என்றும் கூறுகின்றனர். மேலும் மின்சாரம் தடை பட்டால் ஜெனரேட்டர் இயக்குவதற்கு டீசல் வினியோகம் செய்யப்படுவதில்லையாம். இதுபோன்ற பல்வேறு குறைபாடுகளால் பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் தனியார் இணைப்புக்கு மாறும் மனநிலையில் உள்ளனர். பி.எஸ்.என்.எல். சேவை நாளுக்கு நாள் குறைந்து வருவதை பார்க்கும் போது அந்த நிறுவனத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதற்கான அரசின் முன்னோட்டமாக இருக்குமோ என்று சந்தேகம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது. எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு அரசும், சம்பந்தப்பட்ட நிர்வாகமும் பி.எஸ்.என்.எல். சேவை தங்கு தடையின்றி கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story