கடையநல்லூர் அருகே காட்டு யானைகள் மீண்டும் அட்டகாசம் வாழை, தென்னை மரங்கள் நாசம்


கடையநல்லூர் அருகே காட்டு யானைகள் மீண்டும் அட்டகாசம் வாழை, தென்னை மரங்கள் நாசம்
x
தினத்தந்தி 12 July 2019 10:00 PM GMT (Updated: 12 July 2019 8:25 PM GMT)

கடையநல்லூர் அருகே காட்டு யானைகள் மீண்டும் அட்டகாசம் செய்தன. இதில் வாழை, தென்னை மரங்கள் நாசமாயின.

அச்சன்புதூர், 

கடையநல்லூர் அருகே காட்டு யானைகள் மீண்டும் அட்டகாசம் செய்தன. இதில் வாழை, தென்னை மரங்கள் நாசமாயின.

மீண்டும் அட்டகாசம்

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் வரற்றாறு பகுதியில் உள்ள விளைநிலங்களுக்குள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு காட்டு யானைகள் புகுந்தன. அங்கிருந்த 200-க்கும் மேற்பட்ட வாழைகள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை சாய்த்து நாசம் செய்தன.

இதில் இருந்து விவசாயிகள் மீளாத நிலையில் மீண்டும் காட்டு யானைகள் நேற்று அட்டகாசத்தில் ஈடுபட்டன. சேர்வாரன் கோவில் ஓடை பகுதியில் விவசாயிகள் கணேசன், மாரித்துரை ஆகியோரது தோட்டத்தில் காட்டு யானைகள் புகுந்தன. இதில் 100-க்கும் மேற்பட்ட வாழைகளை சாய்த்தும், மிதித்தும் நாசம் செய்தன. மேலும் சில தென்னைகளின் குருத்துகளை பிடுங்கி வீசின.

விவசாயிகள் வேதனை

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், வனப்பகுதியில் காட்டு விலங்குகளுக்காக கட்டப்பட்ட தண்ணீர் தொட்டிகளில் பழுதான மோட்டார்களை சரிசெய்து தண்ணீரை நிரப்பினாலே காட்டு யானைகள் விவசாயிகளின் நிலத்துக்குள் வராது. மேலும் கடந்த ஏப்ரல் மாதம் கடைசியில் கருப்பாநதி அணையில் 32 அடி தண்ணீர் இருந்தது. அடுத்து ஒரே நாளில் அணையில் இருந்து அனைத்து தண்ணீரும் திறந்து விடப்பட்டது. இதனால் மீன்கள் எல்லாம் செத்து மடிந்தது. மீன்பாசி குத்தகை போட்டியால் 32 அடி தண்ணீரை ஒரே நாளில் அணையில் இருந்து திறந்து விடப்பட்டுள்ளதா? என்ற சந்தேகம் எழுகிறது. தற்போது கருப்பாநதி அணையில் தண்ணீர் இல்லாமல் வறண்டதால் தண்ணீர் தேடி காட்டு யானைகள் எங்கள் விவசாய நிலங்களை நாசம் செய்கிறது. எனவே வருங்காலங்களில் கருப்பாநதி அணையில் மீன் வளர்ப்பதை நிறுத்த வேண்டும் என வேதனை தெரிவித்தனர்.

Next Story