2-வது கணவருடன் ஏற்பட்ட தகராறில் 2 வயது மகனை கொன்றுவிட்டு, பெண் தூக்குப்போட்டு தற்கொலை


2-வது கணவருடன் ஏற்பட்ட தகராறில் 2 வயது மகனை கொன்றுவிட்டு, பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 12 July 2019 11:00 PM GMT (Updated: 12 July 2019 8:46 PM GMT)

2-வது கணவருடன் ஏற்பட்ட தகராறில் 2 வயது மகனை கொன்றுவிட்டு தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்துகொண்டார்.

வி.கைகாட்டி, 

இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-

நாகை மாவட்டம், குத்தாலம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகள் சுமிதா (வயது 34). இவருடைய முதல் கணவர் இறந்து விட்டார். இதனால் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அரியலூர் புதுமார்க்கெட் மெயின்ரோட்டை சேர்ந்த சரக்கு வாகன டிரைவரான ஜெயக்குமாரை சுமிதா 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.

ஜெயக்குமாரின் முதல் மனைவி ஏற்கனவே இறந்து விட்டார். ஜெயக்குமார்-சுமிதா தம்பதிக்கு 2 வயதில் ரித்திஷ் என்கிற மகன் உள்ளான். கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் காலையில் வழக்கம்போல் ஜெயக்குமார் வேலைக்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் வீட்டில் மகனுடன் தனியாக இருந்த சுமிதா தனது தாய் அமுதாவை செல்போனில் தொடர்பு கொண்டு நீங்கள் திருமணத்திற்காக எனக்கு போட்ட நகை மற்றும் பொருட்களை எடுத்து செல்லுங்கள் என கூறிவிட்டு உடனடியாக தொடர்பை துண்டித்து விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அமுதா தனது மகளை செல்போனில் தொடர்பு கொண்டபோது, அவர் போனை எடுக்கவில்லை.

இதற்கிடையே வேலைக்கு சென்றிருந்த கணவர் ஜெயக்குமார் நேற்று முன்தினம் மதியம் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டில் உள்ள அறையில் ஒரே சேலையில் மனைவி சுமிதாவும், மகனும் ரித்திசும் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு கதறி அழுதார்.

இதுகுறித்து தகவலறிந்த கயர்லாபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சுமிதா, ரித்திஷின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சுமிதாவின் தாய் அமுதா கொடுத்த புகாரின்பேரில், கயர்லாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

2-வது கணவனுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த சுமிதா தனது 2 வயது மகனை தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்து விட்டு, அவரும் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சுமிதாவிற்கு திருமணமாகி 3 ஆண்டுகளை ஆவதால் அரியலூர் வருவாய் கோட்டாட்சியரும் விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story