உடல் நலத்தை போலீசார் பேணி பாதுகாக்க வேண்டும் கலெக்டர் உமா மகேஸ்வரி பேச்சு


உடல் நலத்தை போலீசார் பேணி பாதுகாக்க வேண்டும் கலெக்டர் உமா மகேஸ்வரி பேச்சு
x
தினத்தந்தி 12 July 2019 10:15 PM GMT (Updated: 12 July 2019 9:20 PM GMT)

போலீசார் தங்கள் உடல் நலத்தை பேணி பாதுகாக்க வேண்டும் என்று கலெக்டர் உமா மகேஸ்வரி பேசினார்.

புதுக்கோட்டை, 

போலீசாருக்கு ஏற்படும் மன அழுத்தத்தை போக்குவதற்கான நிறைவாழ்வு பயிற்சி வகுப்பு புதுக்கோட்டையில் நடைபெற்றது. கலெக்டர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கி, பயிற்சி வகுப்பை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் முன்னிலை வகித்தார். போலீசாருக்கு பயிற்சி கையேடுகளை வழங்கி, கலெக்டர் பேசியதாவது:- சட்டம், ஒழுங்கை பேணி பாதுகாக்கவும், பொதுமக்கள் அமைதியாக வாழ்வதற்கும் தமிழக காவல்துறை தொடர்ந்து சிறப்பாக பணியாற்றி வருகிறது. போலீசாரின் நலனுக்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து சூழ்நிலைகளிலும் போலீசார் பணியாற்றி வருவதால் அவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை போக்கும் வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீசாருக்கும், பல்வேறு கட்டங்களாக நிறைவாழ்வு பயிற்சி தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது.

இந்த பயிற்சியில் போலீசாருக்கு மன அழுத்தம் ஏற்படாமல் தவிர்த்தல், மன அழுத்தத்தை கட்டுப்படுத்துதல், மகிழ்ச்சியான மனநிலையில் பணிபுரிதல் உள்ளிட்ட பல்வேறு உடல் நலம் சார்ந்த புத்துணர்வு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.

போலீசார் தங்களது காவல் பணிகளில் அர்ப்பணிப்பு உணர்வுடன் இருப்பது போல், தங்களது உடல் நலனிலும் அக்கறை செலுத்த வேண்டும். மேலும் போலீசார் தாங்கள் பணிபுரியும் நேரங்களில் தேவையற்ற மன அழுத்தத்தை தவிர்த்து மகிழ்ச்சியான மன நிலையில் பணியாற்ற வேண்டும். போலீசார் தங்கள் உடல் நலம் மற்றும் குடும்ப நலத்தை பேணி பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story