திருவட்டார் அருகே வணிக வளாகத்தில் துணிகரம், அடுத்தடுத்து 5 கடைகளில் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை - முகமூடி அணிந்த மர்மஆசாமி கைவரிசை


திருவட்டார் அருகே வணிக வளாகத்தில் துணிகரம், அடுத்தடுத்து 5 கடைகளில் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை - முகமூடி அணிந்த மர்மஆசாமி கைவரிசை
x
தினத்தந்தி 12 July 2019 10:45 PM GMT (Updated: 12 July 2019 9:28 PM GMT)

திருவட்டார் அருகே வணிக வளாகத்தில் அடுத்தடுத்து 5 கடைகளில் பூட்டை உடைத்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த துணிகர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

திருவட்டார்,

திருவட்டார் அருகே இரவிபுதூர்கடை சந்திப்பு பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஒரு வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்தில் எலக்ட்ரானிக்ஸ், துணிக்கடை, ஆடிட்டர் அலுவலகம், டிராவல்ஸ் நிறுவனம், மளிகை கடை உள்பட 20-க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகிறது.

இந்த வளாகத்தின் தரை தளத்தில் அதே பகுதியை சேர்ந்த கபீர் (வயது 56) என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று காலை வழக்கம் போல் கபீர் கடையை திறக்க வந்தார்.

அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு ஷட்டர் திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, அங்கு மேஜை டிராயரில் வைத்திருந்த 1½ பவுன் நகை மற்றும் ரூ.1,000 திருடு போய் இருந்தது.

இதுகுறித்து அவர் திருவட்டார் போலீசில் புகார் செய்தார். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது, அந்த வணிக வளாகத்தில் 4 கடைகளிலும் பூட்டு உடைக்கப்பட்டு கொள்ளை நடந்திருப்பது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து போலீசார் அங்கு வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.

அதில், முகமூடி அணிந்த மர்ம ஆசாமி கையில் இரும்பு கம்பியுடன் வலம் வரும் காட்சி பதிவாகியிருந்தது. குருவிளைகாடு பகுதியை சேர்ந்த அஜித் ஆன்டணி (28) என்பவர் நடத்தி வரும் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கண்காணிப்பு கேமரா கடையில் பூட்டை உடைத்துள்ளார். அங்கு பணம் எதுவும் இல்லாததால் அவர் ஏமாற்றம் அடைந்தார்.

பின்னர் ஆவேசத்துடன் அடுத்த கடையை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அதாவது, ஆடிட்டர் அலுவலகத்துக்குள் உள்ளே நுழைந்து அங்கிருந்த ரூ.3 ஆயிரத்தை திருடினார். தொடர்ந்து அருகில் உள்ள டிராவல்ஸ் ஏஜென்சி மற்றும் கீழ் தளத்தில் உள்ள ஆண்கள் துணிக்கடை ஆகியவற்றிலும் அந்த நபர் பூட்டை உடைத்து திருடியுள்ளார். ஆனால் அங்கு பணம் எதுவும் சிக்காமல் ஏமாற்றத்துடன் சென்றதை கண்காணிப்பு கேமராவில் காண முடிந்தது என்று போலீசார் தெரிவித்தனர்.

இந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ள மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த துணிகர கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story