பா.ஜ.க.வை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம் சஞ்சய் தத், குமரி ஆனந்தன் பங்கேற்பு


பா.ஜ.க.வை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம் சஞ்சய் தத், குமரி ஆனந்தன் பங்கேற்பு
x
தினத்தந்தி 13 July 2019 11:00 PM GMT (Updated: 13 July 2019 5:25 PM GMT)

கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கலைப்பதற்கு பா.ஜ.க. முயற்சி மேற்கொள்வதாக கூறி தமிழகம் முழுவதும் காங்கிரசார் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை,

சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழக காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் குமரி ஆனந்தன் தலைமை தாங்கினார்.

மாவட்ட தலைவர்கள் சிவராஜசேகரன், எம்.எஸ்.திரவியம், கே.வீரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தேசிய செயலாளர் சஞ்சய் தத் கலந்து கொண்டார். ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதாவது:-

கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கலைப்பதற்கு பா.ஜ.க. முயற்சி செய்து வருகிறது. பா.ஜ.க. ஆட்சி இல்லாத மாநிலத்தில் மத்திய அரசின் துறைகளான வருமான வரி உள்ளிட்டவைகளை கொண்டு மிரட்டுகிறது. கர்நாடகாவில் மக்கள் தேர்ந்தெடுத்த அரசை மாற்ற முயற்சிப்பது ஜனநாயக துரோகமாகும். இதைப்போல் பல மாநிலங்களிலும் பா.ஜ.க. செய்து வருகிறது. காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியின் பின்னால் தமிழக காங்கிரஸ் என்றும் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் சிரஞ்சீவி, நிர்வாகிகள் நவீன், ரஞ்சன்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதேபோல் காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பல்லாவரம் பஸ் நிலையத்தில் மாவட்ட தலைவர் ரூபி மனோகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அகில இந்திய செயலாளர் ஸ்ரீவள்ளிபிரசாத், மாநில துணைத்தலைவர் தாமோதரன், மாநில பொதுச்செயலாளர் ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. யசோதா, எஸ்.சி. எஸ்.டி. பிரிவு தலைவர் செல்வப்பெருந்தகை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story