கண்ணமங்கலம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்


கண்ணமங்கலம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 13 July 2019 10:15 PM GMT (Updated: 13 July 2019 6:34 PM GMT)

கண்ணமங்கலம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கண்ணமங்கலம்,

கண்ணமங்கலம் அருகே கொளத்தூர் ஊராட்சிக்குட்பட்ட அம்மன் நகரில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கொளத்தூர் குன்றுமேடு பகுதியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து அம்மன் நகரில் இருக்கும் மேல்நிலை நீர்த்தேக்கக் தொட்டிக்கு ஏற்றப்பட்டு அங்கிருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.

கடந்த சில வாரங்களாக குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. மேல்நிலை நீர்த்தேக்கக் தொட்டிக்கு நீரேற்றும் பணியை செய்து வரும் சுந்தரமூர்த்தி என்பவர் தனியார் வீடு கட்டும் பணிக்கு இரவு நேரத்தில் தண்ணீர் வினியோகம் செய்து வந்ததால், அம்மன் நகரில் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து பலமுறை கொளத்தூர் ஊராட்சி செயலாளர் முருகேசன், மேற்கு ஆரணி வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் முறையிட்டும் சரி செய்யவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அம்மன் நகரை சேர்ந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று வேலூர் - திருவண்ணாமலை மெயின் ரோட்டில் புதுப்பேட்டை பெட்ரோல் பங்க் அருகே காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவறிந்த கண்ணமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சாலை மறியல் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும் ஊராட்சி செயலாளர் முருகேசன், குடிநீரேற்று பணி செய்யும் சுந்தரமூர்த்தியிடம், சாவியை பெற்று மாற்று நபர் மூலம் குடிநீர் வினியோகம் செய்ய ஏற்பாடு செய்து உள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இதனால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story