தூத்துக்குடியில் பயங்கரம்: பெண் அடித்துக்கொலை கணவர் கைது


தூத்துக்குடியில் பயங்கரம்: பெண் அடித்துக்கொலை கணவர் கைது
x
தினத்தந்தி 13 July 2019 10:30 PM GMT (Updated: 13 July 2019 7:15 PM GMT)

தூத்துக்குடியில் பெண் விறகு கட்டையால் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய கணவரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் பெண் விறகு கட்டையால் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய கணவரை போலீசார் கைது செய்தனர்.

லாரி டிரைவர்

தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகே உள்ள ராஜபாளையத்தை சேர்ந்தவர் பாக்கியமுத்து (வயது 58), லாரி டிரைவர். இவருடைய மனைவி அன்னிபெசன்ட் (55). இவர்களுக்கு வினோதினி என்ற மகளும், பிளோமின் ஜோன் என்ற மகனும் உள்ளனர்.

வினோதினி தூத்துக்குடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாகவும், பிளோமின் ஜோன் தனியார் நிறுவனத்தில் ஊழியராகவும் பணியாற்றி வருகிறார்கள்.

பிணமாக கிடந்தார்

அன்னிபெசன்ட் அந்த பகுதியை சேர்ந்த பெண்களுடன் தினமும் இரவில் அங்குள்ள கிறிஸ்தவ ஆலயத்துக்கு பிரார்த்தனைக்கு செல்வது வழக்கம். எனவே, அவரை ஆலயத்துக்கு அழைத்து செல்வதற்காக பெண்கள் சிலர் நேற்று இரவு 7 மணியளவில் அவரது வீட்டுக்கு சென்றனர். அப்போது அங்கு சமையல் அறையில் அன்னிபெசன்ட் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக தாளமுத்துநகர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

கணவர் கைது

விசாரணையில், பாக்கியமுத்து அடிக்கடி மது அருந்திவிட்டு தனது மனைவி அன்னிபெசன்டுடன் தகராறு செய்து வந்துள்ளார். நேற்றும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த பாக்கியமுத்து விறகு கட்டையால் அன்னிபெசன்டை அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அன்னிபெசன்டின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, பாக்கியமுத்துவை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் மனைவியை கணவரே அடித்துக் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story