நெல்லை மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 3,023 வழக்குகளுக்கு தீர்வு ரூ.14 கோடி இழப்பீடாக வழங்க நீதிபதிகள் உத்தரவு


நெல்லை மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 3,023 வழக்குகளுக்கு தீர்வு ரூ.14 கோடி இழப்பீடாக வழங்க நீதிபதிகள் உத்தரவு
x
தினத்தந்தி 13 July 2019 10:00 PM GMT (Updated: 13 July 2019 7:38 PM GMT)

நெல்லை மாவட்டத்தில் நேற்று நடந்த மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 3,023 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

நெல்லை, 

நெல்லை மாவட்டத்தில் நேற்று நடந்த மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 3,023 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

மக்கள் நீதிமன்றம்

சென்னை மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு பரிந்துரையின் அடிப்படையில் 2-வது தேசிய மக்கள் நீதிமன்றம் நெல்லை மாவட்டத்தில் நேற்று நடந்தது. நெல்லை, தென்காசி, அம்பை, சங்கரன்கோவில், வள்ளியூர், நாங்குநேரி, செங்கோட்டை, சேரன்மாதேவி, சிவகிரி, ஆலங்குளம் ஆகிய தாலுகாக்களில் 18 அமர்வுகள் அமைக்கப்பட்டு இருந்தன.

நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தை நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான நசீர் அகமது தொடங்கி வைத்தார்.

நெல்லையில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் மக்கள் நீதிமன்ற நீதிபதி சுபாதேவி, 1-வது கூடுதல் மாவட்ட நீதிபதி அருள் முருகன், 2-வது கூடுதல் மாவட்ட நீதிபதி தேவநாதன், குடும்ப நல நீதிமன்ற நீதிபதி சந்திரா, மகளிர் நீதிபதி இந்திராணி, குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள் பாபு, பழனி, நிஷாந்தினி, ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி முருகையா ஆகியோர் தலைமையில் 9 அமர்வுகள் அமைக்கப்பட்டு வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன.

3,023 வழக்குகளுக்கு தீர்வு

மொத்தம் 5 ஆயிரத்து 380 வழக்குகள் எடுத்து கொள்ளப்பட்டன. அதில் 2,700 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. மொத்தம் ரூ.10 கோடியே 72 லட்சத்து 65 ஆயிரத்து 950 இழப்பீடாக வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத 5 ஆயிரத்து 603 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. அதில் 323 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. ரூ.34 லட்சத்து 29 ஆயிரத்து 678 வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நெல்லை மாவட்டத்தில் முழுவதும் நேற்று நடந்த மக்கள் நீதிமன்றத்தில் மொத்தம் 3,023 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன. மொத்தம் ரூ.14 கோடியே 15 லட்சத்து 64 ஆயிரத்து 628 இழப்பீடாக வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.

Next Story