தங்கை தற்கொலை செய்ததால் ஆத்திரம்: காதலித்த நர்சிங் மாணவரை கத்தியால் குத்திய வாலிபர் கைது


தங்கை தற்கொலை செய்ததால் ஆத்திரம்: காதலித்த நர்சிங் மாணவரை கத்தியால் குத்திய வாலிபர் கைது
x
தினத்தந்தி 13 July 2019 11:00 PM GMT (Updated: 13 July 2019 7:43 PM GMT)

தங்கை தற்கொலை செய்ததால் ஆத்திரம் அடைந்த வாலிபர், காதலித்த நர்சிங் மாணவரை கத்தியால் குத்தினார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

உத்தமபாளையம்,

உத்தமபாளையம் ஆர்.சி. தெருவை சேர்ந்தவர் அலெக் சாண்டர். சுமைதூக்கும் தொழிலாளி. இவரது மகன் மதன்குமார்(வயது24). இவர் நர்சிங் படித்து வருகிறார். இதே தெருவை சேர்ந்த ஆரோக்கியராஜ் மகள் விநோதினி. இவரும் மதன்குமாரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு விநோதினி கூறி உள்ளார்.

இதற்கு மதன்குமார் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் மனம் உடைந்த விநோதினி கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இறக்கும் முன்பு தனது சாவிற்கான காரணங்களை கடிதத்தில் கூறி இறந்தார். இதன் அடிப்படையில் உத்தமபாளையம் போலீசார் மதன்குமார் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த சிலர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் தனது தங்கை தற்கொலை செய்ததற்கு மதன்குமார்தான் காரணம் என அவரது அண்ணன் மனோஜ்குமார்(22) ஆத்திரத்துடன் இருந்தார். நேற்று முன்தினம் மதன்குமார் தேனிக்கு சென்றுவிட்டு உத்தமபாளையம் பஸ்நிலையம் அருகே நடந்து வந்தார். அப்போது அங்கு வந்த மனோஜ்குமார், மதன்குமாரை வழிமறித்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தினார்.

இதில் பலத்த காயம் அடைந்த மதன்குமார் உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து மனோஜ்குமாரை கைது செய்தனர்.

Next Story