கடையநல்லூரில் கார்-ஆட்டோ மோதல்; 5 பேர் படுகாயம்


கடையநல்லூரில் கார்-ஆட்டோ மோதல்; 5 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 13 July 2019 10:00 PM GMT (Updated: 13 July 2019 7:45 PM GMT)

கடையநல்லூரில் கார்-ஆட்டோ மோதிய விபத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர்.

கடையநல்லூர், 

கடையநல்லூரில் கார்-ஆட்டோ மோதிய விபத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர்.

கார்-ஆட்டோ மோதல்

நெல்லை மாவட்டம் மேலக்கடையநல்லூர் காடாலீஸ்வரர் கோவில் தெருவை சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி (வயது 38) ஆட்டோ டிரைவர். இவர் நேற்று தனது ஆட்டோவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு புளியங்குடிக்கு சென்றுகொண்டிருந்தார்.

கடையநல்லூர் குமந்தாபுரம் வளைவில் சென்றபோது அவருக்கு முன்னால் கிருஷ்ணாபுரம் மிட்டா ஆபீஸ் தெருவை சேர்ந்த கல்யாணி (30) என்பவர் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். இந்த நிலையில் கல்யாணி எதிர்பாராதவிதமாக மொபட்டில் இருந்து தவறி கீழே விழுந்தார். அப்போது எதிரே வந்த காரின் டிரைவர் கல்யாணி மீது மோதாமல் இருப்பதற்காக காரை பக்கவாட்டில் திருப்பினார். அப்போது, எதிர்பாராதவிதமாக தட்சணாமூர்த்தி ஓட்டி வந்த ஆட்டோ மீது காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோ, கார் சேதமானது.

படுகாயம்

இதில் ஆட்டோவில் இருந்த தட்சணாமூர்த்தி, கடையம் அருகே உள்ள லெட்சுமியூரை சேர்ந்த தங்கம்மாள் (50), இடைகாலை சேர்ந்த ரம்யா, காரில் இருந்த சென்னை தண்டையார்பேட்டை பட்டேல் நகரை சேர்ந்த ஹைருன்னிசா (48) உள்பட 5 பேர் படுகாயமடைந்தனர். மேலும் மொபட்டில் இருந்து கீழே விழுந்ததில் கல்யாணியும் காயமடைந்தார்.

உடனே அருகில் இருந்தவர்கள் காயமடைந்த 6 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story