குடிமங்கலத்தில் அரசு பள்ளி முன் விலையில்லா மடிக்கணினி கேட்டு முன்னாள் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்


குடிமங்கலத்தில் அரசு பள்ளி முன் விலையில்லா மடிக்கணினி கேட்டு முன்னாள் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 July 2019 10:45 PM GMT (Updated: 13 July 2019 7:58 PM GMT)

குடிமங்கலத்தில் அரசு பள்ளி முன் விலையில்லா மடிக்கணினி கேட்டு முன்னாள் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அவர்களிடம் அமைச்சர் உடுமலை கே.ராதாகிரு‌‌ஷ்ணன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்.

குடிமங்கலம்,

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் சார்பில் விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. உயர்நிலைக்கல்விக்கு உதவியாக இருப்பதால் இந்த திட்டத்துக்கு மாணவ-மாணவிகளிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இந்த நிலையில் நடப்பு ஆண்டில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் பணி பல்வேறு இடங்களில் முடுக்கி விடப்பட்டு உள்ளது.

திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை தற்போது பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வினியோகிப்பதற்காக விலையில்லா மடிக்கணினிகள் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 2017-18 மற்றும் 2018-19-ம் ஆண்டில் படித்த மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி இதுவரை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் குடிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த 218 மாணவ-மாணவிகளுக்கு இதுவரை விலையில்லா மடிக்கணினி வழங்கப்படவில்லை என தெரிகிறது. எனவே முன்னாள் மாணவர்களுக்கும் விலையில்லா மடிக்கணினிகளை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க கோரி இந்திய மாணவர் சங்கம் சார்பில் திரளான மாணவ-மாணவிகள் குடிமங்கலம் பள்ளி முன் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது மாணவ-மாணவிகள் ஆர்ப்பாட்டம் நடத்திய போது அந்த வழியாக தமிழக கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிரு‌‌ஷ்ணன் காரில் சென்றார்.

பள்ளி முன்பு மாணவ-மாணவிகள் நின்று ஆர்ப்பாட்டம் நடத்துவதை அறிந்த அமைச்சர் காரை விட்டு கீழே இறங்கி அங்கு சென்று சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மாணவ-மாணவிகள் தாங்கள் படித்து 2 ஆண்டுகள் ஆகியும் இன்னும் விலையில்லா மடிக்கணினி வழங்கப்படவில்லை. தங்களுக்கும் அரசு வழங்கும் விலையில்லா மடிக்கணினிகளை வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து மாணவ-மாணவிகளிடம் அமைச்சர், அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் விலையில்லா மடிக்கணினிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். எனவே ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு செல்லுங்கள் என்றார். இதையடுத்து முன்னாள் மாணவ-மாணவிகள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story