கொல்லிமலையில், லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் சாவு சுற்றுலா சென்று திரும்பிய போது பரிதாபம்


கொல்லிமலையில், லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் சாவு சுற்றுலா சென்று திரும்பிய போது பரிதாபம்
x
தினத்தந்தி 13 July 2019 10:00 PM GMT (Updated: 13 July 2019 8:00 PM GMT)

கொல்லிமலைக்கு சுற்றுலா சென்று விட்டு திரும்பிய போது லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

சேந்தமங்கலம், 

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள தூசூர் ஆடு வளர்ப்போர் காலனியை சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மகன் மணிகண்டன் (வயது21). இவர் சம்பவத்தன்று கொல்லிமலைக்கு மோட்டார் சைக்கிளில் சுற்றுலா சென்றார். அங்கு பல்வேறு இடங்களை சுற்றி பார்த்த பின்னர் அவர் மீண்டும் ஊருக்கு திரும்பினார்.

கொல்லிமலை 45-வது கொண்டை ஊசி வளைவில் சென்ற போது எதிரே வந்த டிப்பர் லாரி மீது மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட மணிகண்டன் பலத்த காயம் அடைந்தார். அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில் நேற்று தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி வாலிபர் மணிகண்டன் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து கொல்லிமலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர். இந்த விபத்து குறித்து கொல்லிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story