கீழக்கரையில் பயங்கரம்: தொழில் போட்டியால் வாலிபர் கொன்று புதைப்பு, 2 மாதத்திற்கு பிறகு உடல் தோண்டி எடுப்பு


கீழக்கரையில் பயங்கரம்: தொழில் போட்டியால் வாலிபர் கொன்று புதைப்பு, 2 மாதத்திற்கு பிறகு உடல் தோண்டி எடுப்பு
x
தினத்தந்தி 13 July 2019 11:45 PM GMT (Updated: 13 July 2019 8:23 PM GMT)

கீழக்கரையில் மாயமான வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 2 மாதத்திற்கு பிறகு அவரது உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

கீழக்கரை,

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை புதுக்குடியை சேர்ந்தவர் அப்துல் ஹக்கீம். இவர் கடந்த ஜனவரி மாதம் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக இம்ரான்கான் என்ற கச்சி மரிக்கா (வயது 32) உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அதன்பின்னர் ஜாமீனில் வந்த இம்ரான்கான் கடந்த ஏப்ரல் மாதம் திடீரென மாயமானார். இது குறித்து மே 26–ந்தேதி அவரது சகோதரர் வாசிப் மரைக்காயர் கீழக்கரை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.

இதனிடையே கஞ்சா விற்று வந்த சாகுல்ஹமீது என்பவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், 5 பேருடன் சேர்ந்து இம்ரான்கானை கொலை செய்ததாகவும், சடலத்தை கீழக்கரை கப்பலடி கடற்கரை ஓரத்தில் புதைத்து விட்டதாகவும் சாகுல்ஹமீது போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து கீழக்கரை தாசில்தார் பபிதா சிக்கந்தர் உத்தரவின்பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு முருகேசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராணிமுத்து மற்றும் குற்றத்தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் கிருபானந்தம் ஆகியோர் முன்னிலையில் கீழக்கரை கடல் பகுதியில் இம்ரான்கானின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு அடையாளம் காணப்பட்டது. பின்பு அதே இடத்தில் பிரேத பரிசோதனை நடந்தது.

மேலும் இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொழில் போட்டி காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. கொலை வழக்கில் ஜாமீனில் வெளிவந்த வாலிபர் கொலை செய்யப்பட்டு கடற்கரை ஓரமாக புதைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story