கீழக்கரையில் 4 கிலோ கஞ்சா கடத்தி வந்த 2 பேர் கைது


கீழக்கரையில் 4 கிலோ கஞ்சா கடத்தி வந்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 13 July 2019 10:15 PM GMT (Updated: 13 July 2019 8:23 PM GMT)

ராமநாதபுரத்தில் இருந்து ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிளில் 4 கிலோ கஞ்சா கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கீழக்கரை,

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பல்வேறு இடங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை நடைபெற்று வருகிறது. இது குறித்து பல்வேறு தரப்பினரும் போலீசில் புகார் செய்தனர்.

இருப்பினும் போலீசாரின் பிடியில் சிக்காமல் கஞ்சா வியாபாரிகள் தப்பிச்செல்வது தொடர்கதையாக உள்ளது. இந்த நிலையில் கீழக்கரை சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையில் போலீசார் மின்வாரிய அலுவலகம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ராமநாதபுரத்தில் இருந்து கீழக்கரை நோக்கி வந்த ஆட்டோவை போலீசார் நிறுத்தினர். ஆனால் ஆட்டோ நிற்காமல் வேகமாக சென்றதை தொடர்ந்து போலீசார் அந்த ஆட்டோவை விரட்டிச்சென்றனர்.

அதனை தொடர்ந்து ஆட்டோவை முனீஸ்வரம் பஸ் நிறுத்தம் அருகே நிறுத்தி விட்டு அதன் டிரைவர் ஜெகநாதன் தப்பி ஓடிவிட்டார்.

இதையடுத்து போலீசார் ஆட்டோவை சோதனை செய்த போது அதில் 2 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

இதேபோல அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தபோது அதிலும் 2 கிலோ கஞ்சா எடுத்து வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனைதொடர்ந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த போலீசார் இதுதொடர்பாக கீழக்கரையை சேர்ந்த யூசுப் சுலைமான் (வயது 43), நாகராஜ் (22) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கீழக்கரை சாகுல் ஹமீது என்பவருக்கு கஞ்சா கடத்தி செல்வதாக தெரிவித்தனர்.

மேலும் இதுதொடர்பாக ஆட்டோ டிரைவர் ஜெகநாதன், சாகுல் ஹமீது ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story