ராஜினாமா கடிதம் கொடுத்துள்ள அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுடன் சமரச பேச்சு காங்கிரஸ் தலைவர்கள், குமாரசாமி தீவிரம்


ராஜினாமா கடிதம் கொடுத்துள்ள அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுடன் சமரச பேச்சு காங்கிரஸ் தலைவர்கள், குமாரசாமி தீவிரம்
x
தினத்தந்தி 13 July 2019 10:30 PM GMT (Updated: 13 July 2019 9:09 PM GMT)

சட்டசபையில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறும் நடவடிக்கையாக ராஜினாமா கடிதம் கொடுத்துள்ள அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுடன் சமரச பேச்சுவார்த்தையை காங்கிரஸ் தலைவர்களும், குமாரசாமியும் தீவிரப் படுத்தியுள்ளனர்.

பெங்களூரு,

கர்நாடக அரசியலில் கடந்த ஒரு வாரமாக பரபரப்பான அரசியல் சூழ்நிலை நிலவி வருகிறது.

கூட்டணி அரசுக்கு நெருக்கடி

அதாவது, முதல்-மந்திரி குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளனர். அதுபோல் கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும் வாபஸ் பெற்றுவிட்டனர். அத்துடன் பா.ஜனதாவுக்கு அவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் கர்நாடக சட்டசபையில் கூட்டணி அரசு பெரும்பான்மை பலம் 101 ஆக குறைந்துள்ளது. அதே வேளையில் பா.ஜனதாவின் பலம் சுயேச்சைகளுடன் சேர்த்து 107 ஆக உயர்ந்துள்ளது.

இதனால் கூட்டணி அரசு பெரும்பான்மையை இழக்கும் நெருக்கடியான நிலை ஏற்பட்டுள்ளது. அந்த ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ரமேஷ்குமார் இன்னும் அங்கீகரிக்கவில்லை. இதைதொடர்ந்து அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து, தங்களின் ராஜினாமா கடிதங்களை அங்கீகரிக்கும்படி சபாநாயகருக்கு உத்தரவிட கோரி மனு தாக்கல் செய்துள்ளனர்.

சபாநாயகருக்கு தடை

அந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, வருகிற 16-ந் தேதி வரை எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதங்கள் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. அப்போது முதல்-மந்திரி குமாரசாமி, சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தயார் என்றும், வாக்கெடுப்புக்கான தேதியை சபாநாயகர் முடிவு செய்யுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

கர்நாடக அரசியலில் தொடர்ந்து பரபரப்பான சூழ்நிலை நிலவுவதால் பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) ஆகிய கட்சிகள் தங்களின் எம்.எல்.ஏ.க்களை தனித்தனி ரெசார்ட் ஓட்டல்களில் தங்க வைத்துள்ளனர். தங்களின் எம்.எல்.ஏ.க்களை பாதுகாக்கும் பணிகளை அக்கட்சிகளின் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

சமரச பேச்சுவார்த்தை தீவிரம்

மேலும் சட்டசபையில் வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதற்கான நடவடிக்கையில் கூட்டணி கட்சி தலைவர்கள் இறங்கியுள்ளனர். குறிப்பாக பதவி விலகல் கோரி கடிதம் கொடுத்துள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் சமரச பேச்சுவார்த்தையில் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். அதுபோல் முதல்-மந்திரி குமாரசாமியும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க் களுடன் செல்போனில் பேசி சமாதானப்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.டி.பி.நாகராஜை, பெங்களூரு அருகே உள்ள அவரது வீட்டில் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் மற்றும் தலைவர்கள் நேரில் சந்தித்து பேசினர். அப்போது அவர்கள் உங்களது பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்றும், உங்களது அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்றும் உறுதி அளித்தனர். அத்துடன் ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெறுமாறும் கூறினர். இந்த சமரச பேச்சுவார்த்தை 4 மணி நேரம் நடந்தது. நீண்ட நேரம் நீடித்த பேச்சுவார்த்தைக்கு பிறகு எம்.டி.பி.நாகராஜ் ராஜினாமாவை வாபஸ் பெறுவது குறித்து முடிவு எடுப்பதாக உறுதியளித்தார். இதனால் அவர் ராஜினாமா கடிதத்தை கூடிய விரைவில் வாபஸ் பெறுவார் என தெரிகிறது.

முடிவு எடுப்போம்

இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்த எம்.டி.பி.நாகராஜ், “நான் சில காரணங்களுக்காக ராஜினாமா செய்தேன். காங்கிரஸ் தலைவர்கள் என்னை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெறுமாறு கேட்டுக் கொண்டனர். என்னை சமாதானப்படுத்த அவர்கள் முயற்சி மேற்கொண்டனர். சித்தராமையாவும் என்னிடம் பேசினார். அதனால் ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெறுவது குறித்து ஆலோசித்து முடிவு எடுப்பேன். என்னுடன் சுதாகர் எம்.எல்.ஏ.வும் ராஜினாமா செய்தார். அவரை சந்தித்து பேசுவேன். இருவரும் சேர்ந்து முடிவு எடுப்போம். அவர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை“ என்றார்.

அதன் பிறகு பெங்களூருவில் சித்தராமையாவை எம்.டி.பி.நாகராஜ் நேரில் சந்தித்து பேசினார். அப்போது சித்தராமையா, காங்கிரஸ் கட்சியிலேயே நீடிக்குமாறு எம்.டி.பி.நாகராஜிடம் அறிவுறுத்தினார்.

சித்தராமையா செல்போனில் பேச்சு

அதன்தொடர்ச்சியாக பதவி விலகல் கடிதம் கொடுத்துள்ள சிக்பள்ளாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வான (காங்கிரஸ்) சுதாகர் வீட்டுக்கு மந்திரி டி.கே.சிவக்குமார் சென்றார். ஆனால் அங்கு அவர் இல்லாததால், ஏமாற்றத்துடன் திரும்பினார். இதற்கிடையே சுதாகருடன், சித்தராமையா செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது அவரிடம், ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெறுமாறு கூறிய சித்தராமையா, உங்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவேன் என்று உறுதியளித்தார். அதனால் சுதாகரும் ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெறுவாரா? என்பது குறித்து பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

ராமலிங்கரெட்டி

அதே நேரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ராமலிங்கரெட்டி எம்.எல்.ஏ.வுடன் காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை நடத்தியுள்ளனர். அவரிடம் அகில இந்திய காங்கிரஸ் தலைவர்கள் சிலரும் பேசியிருக்கிறார்கள். அதனால் அவர் வருகிற 15-ந் தேதி (அதாவது நாளை) சட்டசபை கூட்டத்தில் கலந்துகொள்வார் என்றும், ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெறுவார் என்றும் கூறப்படுகிறது.

மேலும் ரோஷன் பெய்க்கை சமாதானப்படுத்தும் முயற்சியை முதல்-மந்திரி குமாரசாமி மேற்கொண்டுள்ளார். அதனால் அவரும் ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெறுவார் என்று கூறப்படுகிறது. பதவி விலகல் கடிதம் கொடுத்துள்ள எம்.டி.பி.நாகராஜ், சுதாகர், ராமலிங்கரெட்டி, ரோஷன் பெய்க் ஆகியோர் வாபஸ் பெறும் பட்சத்தில் கூட்டணி அரசின் பலம் 105 ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பையில் தங்கியுள்ள அதிருப்தி எம்.எல்.ஏ. க்களையும் சமாதானப்படுத்தி, ராஜினாமா கடிதங்களை திரும்ப பெற வைக்க காங்கிரஸ் தலைவர்கள் முடிவு செய்தனர். ஆனால் அவர்களை தொடர்பு கொள்ள முடியாமல் காங்கிரஸ் தலைவர்கள் தவிக்கிறார்கள். பெங்களூருவில் இருந்த முனிரத்னா எம்.எல்.ஏ. நேற்று முன்தினம் ஐதராபாத்துக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து அவர் நேற்று மும்பைக்கு சென்று, அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் முகாமில் சேர்ந்து கொண்டார். இதனால் மும்பையில் தங்கியுள்ள எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

5 எம்.எல்.ஏ.க்கள் மனு

இந்த நிலையில் பதவி விலகல் கடிதம் கொடுத்துள்ள ஆனந்த்சிங், எம்.டி.பி.நாகராஜ், சுதாகர், முனிரத்னா, ரோஷன் பெய்க் ஆகிய 5 பேர் சார்பில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தங்களது ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் அங்கீகரிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இந்த மனுவும் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை), ஏற்கனவே 10 எம்.எல்.ஏ.க்கள் தாக்கல் செய்த மனுவுடன் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.

சாய்பாபா கோவிலில் சிறப்பு தரிசனம்

இதற்கு மத்தியில் நேற்று அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் மும்பையில் இருந்து தனி விமானம் மூலம் சீரடிக்கு சென்று சாய்பாபா கோவிலில் சிறப்பு தரிசனம் செய்தனர். கோவில் சார்பில் அவர்களுக்கு மரியாதை அளிக்கப்பட்டது.

அதன் பிறகு எச்.விஸ்வநாத் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “கர்நாடக மக்களின் நலனுக்காக கோவிலில் வேண்டிக் கொண்டோம். கர்நாடகத்தில் நல்ல தலைமை அமைய வேண்டும் என்றும், சுப்ரீம் கோர்ட்டில் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வர வேண்டும் என்றும் வேண்டினோம்“ என்றார்.

இதற்கிடையே மும்பையில் தங்கியுள்ள 2 சுயேச்சைகளும், சபாநாயகர் ரமேஷ் குமாருக்கு ஒரு கடிதம் கொடுத்துள்ளனர். அதில், கூட்டணி அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றுவிட்டதால், சட்டசபையில் தங்களுக்கு எதிர்வரிசையில் இருக்கைகள் ஒதுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாக்கெடுப்புக்கான தேதி நாளை முடிவு

இதற்கிடையே நம்பிக்கை வாக்கெடுப்பு எந்த தேதியில் நடைபெறும் என்பது குறித்து நாளை (திங்கட்கிழமை) முடிவு செய்யப்படுகிறது. அடுத்த வாரத்தில் இந்த வாக்கெடுப்பு நடைபெறுவது உறுதி என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள எடியூரப்பா, “குமாரசாமி, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது அர்த்தமற்றது. கூட்டணி அரசு கவிழ்வது தவிர்க்க முடியாதது. ராஜினாமா செய்துள்ள எம்.எல்.ஏ.க்களை திரும்ப அழைத்து வர சதி நடக்கிறது” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

Next Story