சாவில் சந்தேகம் இருப்பதாக புகார்: தொழிலாளி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்


சாவில் சந்தேகம் இருப்பதாக புகார்: தொழிலாளி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 13 July 2019 11:15 PM GMT (Updated: 13 July 2019 9:18 PM GMT)

சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் கூறி தொழிலாளியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி,

விழுப்புரம் மாவட்டம் கிளியனூரை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 64), தொழிலாளியான இவர் காலில் ஏற்பட்ட காயத்துக்காக சிகிச்சை பெற கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்தார். அவருடன் உறவினர் கூத்தான் என்பவர் இருந்து கவனித்து வந்தார்.

அவர் மாற்று துணி எடுத்துவர ஊருக்கு சென்ற நிலையில் அவரை மருத்துவமனை ஊழியர்கள் ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் பாண்டியன் ஜிப்மர் பஸ் நிறுத்தத்தில் சுயநினைவின்றி மயங்கிக்கிடந்ததாகவும், அவரை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்று டாக்டர்கள் பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே இறந்திருப்பதும் தெரியவந்தது. அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் தெரிவித்த புகார் அடிப்படையில் கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று ஜிப்மர் ஆஸ்பத்திரியில் பாண்டியனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அவரது உடலை வாங்க உறவினர்கள் சிலர் மறுத்த நிலையில் போலீசார் ஆம்புலன்சு ஏற்பாடு செய்து கிளியனூருக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கும் பொதுமக்கள் உடலை வாங்காமல் எதிர்ப்பு தெரிவிக்கவே வேறுவழியில்லாமல் கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரிக்கு கொண்டு வந்து வைத்தனர்.

இந்தநிலையில் பாண்டியனின் உறவினர்கள் கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பாண்டியனின் சாவுக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினார்கள். அவர்களிடம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

ஆனால் அவர்களது சமரசத்தை உறவினர்கள் யாரும் ஏற்கவில்லை. சுகாதாரத்துறை அமைச்சர் அல்லது கலெக்டர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்தநிலையில் மருத்துவமனை அதிகாரிகளும், போலீசாரும் அவர்களை அலுவலகத்துக்கு அழைத்து வந்து மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது மருத்துவமனையில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். அதைத்தொடர்ந்து பொதுமக்கள் மாலையில் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றனர். பாண்டியனின் உடலையும் பெற்று சென்றனர்.

Next Story