பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது - அமைச்சர் கமலக்கண்ணன் வேதனை


பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது - அமைச்சர் கமலக்கண்ணன் வேதனை
x
தினத்தந்தி 13 July 2019 11:00 PM GMT (Updated: 13 July 2019 9:18 PM GMT)

புதுவை மாநிலத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதாக அமைச்சர் கமலக்கண்ணன் வேதனை தெரிவித்தார்.

புதுச்சேரி,

புதுவை கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுவை மாநிலத்தில் மொத்தம் 6 பாலிடெக்னிக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 1,512 இடங்கள் உள்ளன. இதுவரை 721 இடங்களுக்கு மட்டுமே விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. மீதம் உள்ள இடங்களுக்கு மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கவில்லை.

மோதிலால் நேரு பாலிடெக்னிக்கில் 179 இடங்களும், மகளிர் பாலிடெக்னிக்கில் 100 இடங்களும், காரைக்கால் பாலிடெக்னிக்கில் 297 இடங்களும், மகளிர் பாலிடெக்னிக்கில் 142 இடங்களும், மாகி பாலிடெக்னிக்கில் 37 இடங்களும், ஏனாம் பாலிடெக்னிக்கில் 36 இடங்களும் காலியாக உள்ளன. மேற்கண்ட காலியாக உள்ள இடங்களில் சேர விரும்பும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் வருகிற 17-ந்தேதிக்குள் நேரடியாக அந்தந்த பாலிடெக்னிக்குகளில் சென்று சேர்ந்து கொள்ளலாம்.

மேலும் 12-ம் வகுப்பு படித்து முடித்த மாணவ, மாணவிகள் பாலிடெக்னிக் கல்லூரிகளில் 2-ம் ஆண்டில் நேரடியாக சேர தகுதிபெற்றவர்கள். அவர்களுக்காக 841 இடங்கள் உள்ளன. அதில் தற்போது 618 இடங்கள் காலியாக உள்ளன. அந்த இடங்களில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு சென்று நேரடியாக சேர்ந்துகொள்ளலாம்.

அனைத்து பாடப்பிரிவுகளிலும் 50 சதவீதம் அளவுக்கு இடங்கள் காலியாக உள்ளன. பாலிடெக்னிக் படிப்புக்கு மாணவர் ஒருவருக்கு அரசு தலா ரூ.1.10 லட்சம் செலவழிக்கிறது. தற்போது மாணவ, மாணவிகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளையே விரும்பி சேர்கின்றனர். ஆனால் பாலிடெக்னிக் படித்தவர்களில் 70 சதவீதம் பேர் உடனடியாக வேலைவாய்ப்பினை பெற்றுள்ளனர்.

மேலும் இங்கு தேர்ச்சி விகிதமும் குறைகிறது. இதற்கு ஆசிரியர்கள் காரணம் என்று தெரிந்தால் இதுதொடர்பாக அவர்களது தகுதி விவரங்கள் சேகரிக்கப்பட்டு அவர்களது சர்வீஸ் புத்தகத்தில் குறிப்பிடப்படும்.

பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை வருகிற 22-ந்தேதிக்குள் முடித்துவிட வேண்டும் என்று தொழில்நுட்ப கழகம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த மாதம் முழுமைக்கும் சிறப்பு அனுமதி பெற்று மாணவர்களை சேர்க்க உள்ளோம். தற்போது தமிழகம் உள்ளிட்ட பிற மாநில மாணவர்களும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர அனுமதி கொடுத்துள்ளோம். மாகி பாலிடெக்னிக்கில் மாகியை சேர்ந்த 17 பேர் மட்டுமே படிக்கின்றனர். கேரளாவை சேர்ந்த 48 பேர் அங்கு சேர்ந்துள்ளனர்.

கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள் பணியிடம் மத்திய தேர்வாணையம் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. தற்காலிகமாக இயக்குனர் அளவில் நேர்முகத்தேர்வு நடத்தி கவுரவ விரிவுரையாளர்களை நியமித்தோம். அவர்களை தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்ககோரி அரசாங்கத்துக்கு கோப்புகளை அனுப்பினோம். ஆனால் அதிகாரத்தில் உள்ளவர்கள் அதனை ஏற்கவில்லை. தற்போது அந்த விரிவுரையாளர்களின் கோரிக்கைகளையும் கவனத்தில் எடுத்துள்ளோம்.

இவ்வாறு அமைச்சர் கமலக்கண்ணன் கூறினார்.

பேட்டியின்போது உயர்கல்வித்துறை இயக்குனர் யாசம் லட்சுமி நாராயண ரெட்டி உடனிருந்தார்.

Next Story