ராஜினாமா விவகாரத்தில் சபாநாயகர் முன் நாளை விசாரணைக்கு ஆஜரான பின்பு அடுத்தகட்ட முடிவு ராமலிங்கரெட்டி எம்.எல்.ஏ. பேட்டி


ராஜினாமா விவகாரத்தில் சபாநாயகர் முன் நாளை விசாரணைக்கு ஆஜரான பின்பு அடுத்தகட்ட முடிவு ராமலிங்கரெட்டி எம்.எல்.ஏ. பேட்டி
x
தினத்தந்தி 13 July 2019 10:00 PM GMT (Updated: 13 July 2019 9:20 PM GMT)

ராஜினாமா விவகாரத்தில் சபாநாயகர் முன்பு நாளை(திங்கட்கிழமை) விசாரணைக்கு ஆஜரான பின்பு அடுத்தகட்ட முடிவு எடுப்பதாக ராமலிங்கரெட்டி எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

பெங்களூரு, 

ராஜினாமா விவகாரத்தில் சபாநாயகர் முன்பு நாளை(திங்கட்கிழமை) விசாரணைக்கு ஆஜரான பின்பு அடுத்தகட்ட முடிவு எடுப்பதாக ராமலிங்கரெட்டி எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

பா.ஜனதா எம்.எல்.ஏ. சந்திப்பு

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராமலிங்கரெட்டி தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து, ராஜினாமாவை திரும்ப பெறும்படி ராமலிங்கரெட்டியை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். தினமும் அவரை சந்தித்து சமாதானப்படுத்தும் முயற்சியில் காங்கிரஸ் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், பா.ஜனதாவை சேர்ந்த விஸ்வநாத் எம்.எல்.ஏ. நேற்று காலையில் ராமலிங்கரெட்டியை சந்தித்து பேசினார்.

அப்போது ராஜினாமாவை வாபஸ் பெறக்கூடாது என்றும், பா.ஜனதா கட்சியில் சேரும்படி ராமலிங்கரெட்டியிடம் அவர் கேட்டுக் கொண்டதாகவும் தெரிகிறது. பா.ஜனதாவில் சேருவது பற்றி விஸ்வநாத் எம்.எல்.ஏ.விடம் ராமலிங்கரெட்டி எதுவும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. பின்னர் ராமலிங்கரெட்டி எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

கூட்டத்தொடரில் கலந்து கொள்வேன்

ராஜினாமாவை திரும்ப பெறும்படி காங்கிரஸ் தலைவர்கள் என்னை சந்தித்து வலியுறுத்தி வருகின்றனர். ஜனதாதளம்(எஸ்) கட்சியின் தலைவரும் என்னிடம் பேசி வருகிறார். எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி சபாநாயகர் அழைத்துள்ளார். அதன்படி, வருகிற 15-ந் தேதி (அதாவது நாளை) சபாநாயகர் முன்பு விசாரணைக்கு ஆஜராவேன். அன்றைய தினம் நடைபெறும் சட்டசபை கூட்டத்தொடரிலும் கலந்து கொள்வேன். அதுவரை அரசியல் பற்றி அதிகம் பேச விரும்பவில்லை.

சபாநாயகர் முன்பு விசாரணைக்கு ஆஜரான பின்பு, என்னுடைய அடுத்தகட்ட முடிவு என்ன? என்பதை அறிவிப்பேன். ராஜினாமாவை திரும்ப பெறுவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. எனது மகள் சவுமியா ரெட்டி, எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வாரா? என்பது எனக்கு தெரியாது. அதுபற்றி அவரிடம் தான் கேட்க வேண்டும்.

இவ்வாறு ராமலிங்கரெட்டி கூறினார்.

Next Story