விருத்தாசலம் அருகே பரபரப்பு முந்திரிதோப்பில் உடல் கருகிய நிலையில் பெண் பிணம் கொலையா? போலீஸ் தீவிர விசாரணை


விருத்தாசலம் அருகே பரபரப்பு முந்திரிதோப்பில் உடல் கருகிய நிலையில் பெண் பிணம் கொலையா? போலீஸ் தீவிர விசாரணை
x
தினத்தந்தி 13 July 2019 10:45 PM GMT (Updated: 13 July 2019 10:23 PM GMT)

விருத்தாசலம் அருகே முந்திரிதோப்புக்குள் உடல் கருகிய நிலையில் பெண் ஒருவர் பிணம் மாக கிடந்தார். அவரை யாரேனும் கொலை செய்தார்களா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கம்மாபுரம், 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த இருப்பு கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவருக்கு சொந்தமாக அந்த பகுதியில் முந்திரி தோப்பு உள்ளது. நேற்று காலை தனது முந்திரி தோப்பில் உழவு பணி மேற்கொள்வதற்காக, செல்வராஜ் அங்கு சென்றார். அப்போது தோப்பின் உள்ளே ஒரு முந்திரி மரத்தடியில் மனிதனின் கால்கள் மட்டும் பாதி எரிந்த நிலையில் கிடந்தது.

இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், அந்த பகுதியில் பார்த்த போது, சற்று தொலையில் உடல் பகுதி பாதி எரிந்து கருகிய நிலையில் கிடந்தது. கைகள் மற்றொரு பகுதியில் கிடந்தன. அதோடு பெண்கள் பயன்படுத்தும் தோடு, கவரிங் செயின் ஆகியனவும் அங்கு கிடந்தன.

பின்னர் இது பற்றி அவர் உடனடியாக ஊ.மங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, எரிந்த நிலையில் கிடந்த உடலை பார்வையிட்டனர். மேலும் அங்கு கிடந்த தோடு, கவரிங் செயின் ஆகியவற்றின் மூலம் இறந்தவர் பெண் என்பதை அவர்கள் உறுதிப்படுத்தினர்.

தொடர்ந்து தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் கிடந்த தடயங்களை சேகரித்தனர். பின்னர் பெண்ணின் உடல் மற்றும் கை, கால்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், முந்திரி தோப்பின் அருகில் உள்ள மயானத்தில் எரிந்து கிடந்த பெண்ணின் உடலை நாய்கள் இழுத்து வந்து போட்டு இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. இருப்பினும் அந்த பெண் யார்? யாரேனும் அவரை முந்திரி தோப்புக்குள் கடத்தி வந்து கற்பழித்து கொலை செய்துவிட்டு, உடல் அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்து சென்றார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story