சாணார்பட்டி அருகே, பஸ் மீது மோட்டார்சைக்கிள் மோதி 2 பேர் பலி


சாணார்பட்டி அருகே, பஸ் மீது மோட்டார்சைக்கிள் மோதி 2 பேர் பலி
x
தினத்தந்தி 14 July 2019 10:45 PM GMT (Updated: 14 July 2019 6:00 PM GMT)

சாணார்பட்டி அருகே பஸ் மீது மோட்டார்சைக்கிள் மோதி 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

கோபால்பட்டி,

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள அஞ்சுகுளிப்பட்டியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 34). விவசாயி. பாறைப்பட்டியை சேர்ந்தவர் அழகர்சாமி (47). இவர், ஆழ்துளை கிணறு அமைப்பதற்கான நீரோட்டம் பார்க்கும் தொழிலாளி. இவர்கள் 2 பேரும் அஞ்சுகுளிப்பட்டியில் இருந்து கோபால்பட்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.மோட்டார் சைக்கிளை லட்சுமணன் ஓட்டினார். சாணார்பட்டி அருகே விளக்குரோடு என்ற இடத்தில் சென்றபோது முன்னால் சென்ற லாரியை லட்சுமணன் முந்த முயன்றார். அப்போது, எதிரே ஜோத்தாம்பட்டியில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த அரசு டவுன்பஸ் மீது திடீரென மோட்டார்சைக்கிள் மோதியது. இதில் லட்சுமணனும், அழகர்சாமியும் பஸ்சின் முன்பக்கத்தில் மோதி படுகாயம் அடைந்தனர்.

உயிருக்கு போராடிய அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அழகர்சாமி பரிதாபமாக உயிரிழந்தார். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் லட்சுமணன் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்தார்.

இந்த விபத்து குறித்து சாணார்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story