திருவொற்றியூரில் ராட்சத அலையில் சிக்கி வாலிபர் சாவு மற்றொருவர் மாயம்


திருவொற்றியூரில் ராட்சத அலையில் சிக்கி வாலிபர் சாவு மற்றொருவர் மாயம்
x
தினத்தந்தி 15 July 2019 12:11 AM GMT (Updated: 15 July 2019 12:11 AM GMT)

திருவொற்றியூரில் ராட்சத அலையில் சிக்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார். மற்றொருவர் மாயமாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவொற்றியூர்,

திருவொற்றியூர் ஒண்டிக்குப்பம் பகுதியில் ‘லெதர் கோட்’ தொழிற்சாலை உள்ளது. இங்கு 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று விடுமுறை என்பதால் அங்கு தங்கி வேலை பார்த்து வந்த ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கனகராஜ்பட்டியை சேர்ந்த செய்யது நிஜாமுதீன் (வயது 19), வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்த இர்ஷாத் அகமது (21) மற்றும் அமிஷ்திவாரி, பிராவன், ரமேஷ் ஆகிய 5 பேர் நேற்று மாலை 3 மணி அளவில் திருவொற்றியூர் திருச்சிணாங்குப்பம் பாப்புலர் எடைமேடை பின்புறம் கடலில் குளித்து விளையாடிக்கொண்டு இருந்தனர்.

அப்போது திடீரென்று வந்த ராட்சத அலை வாலிபர்கள் செய்யது நிஜாமுதீன், இர்ஷாத் அகமது ஆகிய 2 பேரையும் கடலுக்குள் இழுத்துச் சென்றது. இதனை பார்த்த, சக நண்பர்கள் 3 பேரும் கடலில் இருந்து வெளியே ஓடிவந்து, தங்கள் நண்பர்களை காப்பாற்றும்படி கூச்சலிட்டனர்.

உடனே அருகில் இருந்த மீனவர்கள், கடலில் குதித்து அலையில் சிக்கி மாயமான வாலிபர்களை தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. சுமார் 1 மணி நேரம் கழித்து செய்யது நிஜாமுதீன் உடல் கரை ஒதுங்கியது. ராட்சத அலையில் சிக்கிய அவர், நீரில் மூழ்கி இறந்துவிட்டார்.

மற்றொரு வாலிபரான இர்ஷாத் அகமதுவை கண்டுபிடிக்க முடியவில்லை. அவரது நிலை என்ன? என்பது தெரியவில்லை. இதுபற்றி தகவல் அறிந்ததும் திருவொற்றியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று செய்யது நிஜாமுதீன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாயமான இர்ஷாத் அகமதுவை தேடி வருகின்றனர்.

Next Story