டாக்டர்கள் இல்லாததால் செவிலியர்கள் பிரசவம் பார்த்ததில் குழந்தை சாவு அரசு சுகாதார நிலையத்தை உறவினர்கள் முற்றுகை


டாக்டர்கள் இல்லாததால் செவிலியர்கள் பிரசவம் பார்த்ததில் குழந்தை சாவு அரசு சுகாதார நிலையத்தை உறவினர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 17 July 2019 10:15 PM GMT (Updated: 17 July 2019 5:54 PM GMT)

தோகைமலையில் டாக்டர்கள் இல்லாததால் செவிலியர்கள் பிரவசம் பார்த்ததில் குழந்தை இறந்ததால், அரசு சுகாதார நிலையத்தை அவரது உறவினர்கள் முற்றுகையிட்டனர்.

தோகைமலை,

கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள மேட்டு பிள்ளையார் கோவில் மேற்கு பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 26). நிறைமாத கர்ப்பிணியான இவர், கடந்த 14-ந்தேதி தோகைமலையில் உள்ள அரசு சுகாதார நிலையத்திற்கு பிரசவம் பார்க்க சென்றுள்ளார். அங்கு 2 நாட்கள் தங்கி சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் மாலையில் ராஜேஸ்வரிக்கு பிரசவவலி ஏற்பட்டது. அப்போது அங்கு டாக்டர்கள் இல்லாததால் ராஜேஸ்வரிக்கு அங்கிருந்த செவிலியர்கள் பிரசவம் பார்த்துள்ளனர். இதில் பிறந்த ஆண் குழந்தை சிறிது நேரத்தில் மூச்சு திணறி இறந்தது.

இதை மறைத்த செவிலியர்கள், ஒருமணி நேரம் கழித்து ராஜேஸ்வரியின் கணவர் மற்றும் உறவினர்களிடம் குழந்தைக்கு அதிக மூச்சு திணறல் ஏற்படுகிறது என்றும், இதற்கான கருவி இல்லாததால், நீங்கள் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று குழந்தைக்கும், தாய்க்கும் சிகிச்சை அளித்து கொள்ளுங்கள் என்று கூறினர். இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு குழந்தையும், தாயும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதில் தாய் ராஜேஸ்வரியையும், பிறந்த குழந்தையையும் மணப்பாறை டாக்டர்கள் பரிசோதனை செய்ததில், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டது என கூறினர். மேலும் ராஜேஸ்வரியை தோகைமலை சுகாதார நிலையத்திற்கே அழைத்து செல்லுங்கள் என்று கூறினர். இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேஸ்வரியின் உறவினர்கள் ராஜேஸ்வரியை அதே ஆம்புலன்சில் அழைத்து கொண்டு தோகைமலை அரசு சுகாதார நிலையத்தில் மீண்டும் அனுமதித்தனர். பின்னர் குழந்தையை மேட்டு பிள்ளையார் கோவில் மேற்கு பகுதியில் உள்ள அவர்களது வீட்டில் அடக்கம் செய்தனர்.

பின்னர் தோகைமலை அரசு சுகாதார நிலையத்திற்கு நேற்று அதிகாலை வந்த ராஜேஸ்வரியின் உறவினர்களிடம், அங்கிருந்த செவிலியர்கள் ராஜேஸ்வரிக்கு அதிகமாக ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. நீங்கள் அவரை உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனைக்கோ அல்லது மணப்பாறை அரசு மருத்துவமனைக்கோ கொண்டு சென்று சிகிச்சை அளியுங்கள் என்று கூறினர். இதைக்கேட்டு மேலும் ஆத்திரமடைந்த ராஜேஸ்வரியின் உறவினர்கள், டாக்டர்கள் இல்லாமல் நீங்களே (செவிலியர்கள்) பிரசவம் பார்த்ததால் தான் குழந்தை இறந்து விட்டது. குழந்தை இறந்ததை மறைத்து எங்களை அலைக்கழிக்கிறீர்கள் என்று கூறி தோகைமலை அரசு சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த குளித்தலை துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் முதலில் ராஜேஸ்வரிக்கு முறையான சிகிச்சை அளித்து காப்பாற்றுங்கள் என்றும், அவரை உடனடியாக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுங்கள், குழந்தை இறந்தது குறித்து உயர்அதிகாரிகளிடம் பேசி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து ராஜேஸ்வரியை அவரது உறவினர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கரூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story