ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சார்பில் திருப்பதி ஏழுமலையானுக்கு வஸ்திர மரியாதை


ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சார்பில் திருப்பதி ஏழுமலையானுக்கு வஸ்திர மரியாதை
x
தினத்தந்தி 17 July 2019 10:30 PM GMT (Updated: 17 July 2019 9:07 PM GMT)

மொகலாய மன்னர்களின் படையெடுப்பின்போது ஸ்ரீரங்கம் கோவில் உற்சவர் நம்பெருமாள் விக்ரகம் அவர்களிடம் கிடைக்காமல் இருக்க திருப்பதியில் 40 ஆண்டுகள் வைத்து பாதுகாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஸ்ரீரங்கம்,

மொகலாய மன்னர்களின் படையெடுப்பின்போது ஸ்ரீரங்கம் கோவில் உற்சவர் நம்பெருமாள் விக்ரகம் அவர்களிடம் கிடைக்காமல் இருக்க திருப்பதியில் 40 ஆண்டுகள் வைத்து பாதுகாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஆடி மாதம் 1-ந் தேதி வஸ்திர மரியாதை செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி நேற்று முன்தினம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து திருப்பதிக்கு எடுத்துச் செல்லப்படும் வஸ்திரங்கள், குடைகள், அனைத்து வகை மலர்கள், பழங்கள், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் கோவில் ரெங்கவிலாஸ் மண்டபத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. பின்னர் ஒரு தட்டை யானை மீது வைத்தும், மற்ற தட்டுகளை அதிகாரிகள், கோவில் ஊழியர்கள் கையில் எடுத்து கொண்டும் ஊர்வலமாக வந்து மீண்டும் கோவிலுக்கு அடைந்தனர். இதையடுத்து வஸ்திர மரியாதைகளுடன் நேற்று முன்தினம் இரவு திருப்பதிக்கு எடுத்து சென்றனர். அங்கு திருப்பதி ஏழுமலையானுக்கு வஸ்திர மரியாதை அளித்து விட்டு ஸ்ரீரங்கம் திரும்புகின்றனர்.

இதில் கோவில் இணை ஆணையர் ஜெயராமன், உதவி ஆணையர் கந்தசாமி, தலைமை அர்ச்சகர் சுந்தர்பட்டர் மற்றும் அர்ச்சகர்்கள், அறங்காவலர்கள், கோவில் ஊழியர்கள் கலந்து கொண்டனர். 

Next Story