ரவுடி கொலைவழக்கில் சாட்சிகளிடம் விசாரணை: புதுவை கோர்ட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு


ரவுடி கொலைவழக்கில் சாட்சிகளிடம் விசாரணை: புதுவை கோர்ட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 17 July 2019 11:30 PM GMT (Updated: 17 July 2019 9:10 PM GMT)

ரவுடி கொலைவழக்கில் சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதை தொடர்ந்து புதுவை கோர்ட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

புதுச்சேரி,

புதுச்சேரி லாஸ்பேட்டை மடுவுபேட் பகுதியைச் சேர்ந்தவர் ரவுடி முரளி. இவர் கடந்த 15.2.2017 அன்று வழுதாவூர் சாலையில் தட்டாஞ்சாவடி செந்திலுக்கு சொந்தமான இடத்தில் ரவுடி சுந்தர் மற்றும் அவனது கூட்டாளிகளால் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தட்டாஞ்சாவடி செந்தில், சுந்தர் உள்பட பலரை கைது செய்தனர். இதனை தொடர்ந்து தட்டாஞ்சாவடி செந்தில் மீது குண்டர் தடுப்புச்சட்டமும் பாய்ந்தது.

இதனை எதிர்த்து அவர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து குண்டர் தடுப்புச் சட்டத்தில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். அதேசமயம் அவருக்கு ஜாமீன் வழங்க கோர்ட்டு மறுத்துவிட்டது. இதனால் தொடர்ந்து அவர் சிறையிலேயே இருந்து வருகின்றார்.

இந்த நிலையில் மடுவுபேட் முரளி கொலை வழக்கு தொடர்பாக புதுச்சேரி கோர்ட்டில் நேற்று சாட்சிகளிடம் விசாரணை நடந்தது. இதில் தட்டாஞ்சாவடி செந்தில், சுந்தர் உள்பட பலர் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனால் கோர்ட்டு வளாகத்தில் தட்டாஞ்சாவடி செந்திலின் ஆதரவாளர்கள் குவிந்தனர். எனவே அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடந்துவிட கூடாது என்பதற்காக கோர்ட்டு வளாகத்தில் நேற்று கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வக்கீல்களை தவிர மற்றவர்கள் தீவிர விசாரணைக்கு பின்னரே கோர்ட்டு வளாகத்தின் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் முரளியின் தாயார் உள்பட 7 பேர் நேற்று ஆஜராயினர். அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை வருகிற 19-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Next Story