வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை


வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை
x
தினத்தந்தி 18 July 2019 9:45 PM GMT (Updated: 18 July 2019 5:42 PM GMT)

சங்கரன்கோவில் அருகே வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

சங்கரன்கோவில், 

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள காப்புலிங்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சங்கிலியாண்டி. இவருடைய மகன் மகேந்திர பாண்டி (வயது 21). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது.

இதனால் மகேந்திர பாண்டியை கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது பெற்றோர் சங்கரன்கோவில் அருகே வயலி கிராமத்தில் உள்ள ஒரு கோவிலில் தங்கும்படி விட்டுச் சென்றனர். ஆனால் மீண்டும் பெற்றோர் தன்னை கூப்பிட வராததால் மனமுடைந்த மகேந்திர பாண்டி நேற்று முன்தினம் கோவில் அருகே உள்ள பாழடைந்த கட்டிடத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சங்கரன்கோவில் அருகே உள்ள பெரும்பத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் மகன் பலவேசம் (20). இவர் மதுரையில் உள்ள கல்லூரியில் கேட்டரிங் படித்து வந்தார். பலவேசத்தின் கல்வி கட்டணத்தை செலுத்துவதற்கு கணேசன் ரூ.20 ஆயிரம் கொடுத்துள்ளார். இதனை பலவேசம் தொலைத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் பலவேசத்தை, கணேசன் கண்டித்துள்ளார். இதன் காரணமாக மனமுடைந்த பலவேசம் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் பலவேசத்தை மீட்டு சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பலவேசம் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவங்கள்குறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story