தர்மபுரி மாவட்டத்தில் முதல்முறையாக பொறியாளர்கள் சங்கம் சார்பில் கட்டிட பொருட்கள் கண்காட்சி இன்று தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது


தர்மபுரி மாவட்டத்தில் முதல்முறையாக பொறியாளர்கள் சங்கம் சார்பில் கட்டிட பொருட்கள் கண்காட்சி இன்று தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது
x
தினத்தந்தி 18 July 2019 10:45 PM GMT (Updated: 18 July 2019 7:00 PM GMT)

தர்மபுரி மாவட்டத்தில் முதல் முறையாக பொறியாளர்கள் சங்கம் சார்பில் கட்டிட பொருட்கள் கண்காட்சி இன்று (வெள்ளிக் கிழமை) தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.

தர்மபுரி,

தர்மபுரி கட்டிட பொறியாளர்கள் சங்கம் சார்பில் மாவட்டத்தில் முதல் முறையாக கட்டிட பொருட்கள் கண்காட்சி தர்மபுரி டி.என்.சி.விஜய் மகாலில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. இந்த கண்காட்சியில் 90-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. அனைத்து வகையான கட்டிட பொருட்கள் மற்றும் நவீன உலகின் புதுமையான பொருட்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளன. இந்த கண்காட்சியில் பங்கேற்று பார்வையிடும் பொதுமக்களுக்கு மூத்த கட்டிட பொறியாளர்கள், கல்வியாளர்கள், வாஸ்து நிபுணர்கள் தினமும் ஆலோசனை வழங்குகிறார்கள். இந்த கண்காட்சி தொடக்க விழா மற்றும் மலர் வெளியீட்டு விழா இன்று காலை 10 மணிக்கு நடக்கிறது.

விழாவுக்கு கண்காட்சி குழு தலைவர் என்ஜினீயர் ஜி.கருணாகரன் தலைமை தாங்குகிறார். தர்மபுரி கட்டிட பொறியாளர் சங்க தலைவர் சி.மாரியப்பன் வரவேற்று பேசுகிறார். மண்டல தலைவர் ஜி.ரவி அறிக்கை வாசிக்கிறார். பொருளாளர் ஜி.அரிபிரசாத், மக்கள் தொடர்பு அலுவலர் ஜி.மூர்த்தி, என்ஜினீயர்கள் ஆர்.தென்னரசு, டி.சக்திகுமார் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். டி.என்.சி. சிட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டி.என்.சி.இளங்கோவன் கண்காட்சி முதன்மை அரங்கை திறந்து வைக்கிறார். டி.என்.வி.பஜாஜ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டி.என்.வி.செல்வராஜ் கண்காட்சியின் 2-வது அரங்கு மற்றும் மேடை அரங்கை திறந்து வைக்கிறார். தர்மபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல் 3-வது அரங்கை திறந்து வைக்கிறார்.

தமிழ்நாடு புதுச்சேரி அனைத்து பொறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கவுரவ தலைவர் ஆர்.மோகன்ராஜ் கண்காட்சி மலரை வெளியிடுகிறார். இதை நகராட்சி பொறியாளர் வி.கிருஷ்ணகுமார் பெற்று கொள்கிறார். முடிவில் கண்காட்சி குழுவின் துணைத்தலைவர் டி.ஜே.கார்த்திகேயன் நன்றி கூறுகிறார். இந்த கண்காட்சியில் மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்தும், ஆற்று மணலுக்கு பதிலாக மாற்று மணலின் நவீன தொழில்நுட்பம் குறித்தும் சிறந்த கட்டிட பொறியாளர்களை கொண்டு பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது.

கண்காட்சியையொட்டி பொதுமக்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. தினமும் மாலை நேரங்களில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடக்கிறது. இந்த கண்காட்சியில் இடம் பெறும் சிறந்த அரங்குகளுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை கண்காட்சி விழாக்குழு தலைவர் ஜி.கருணாகரன் தலைமையில் என்ஜினீயர்கள் ஆர்.சந்தானம், எஸ்.சசிக்குமார், கே.ருமேஷ்சந்திரா, ஆர்ச்சிடெக் எஸ்.சசிக்குமார் மற்றும் பொறியாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் விழாக்குழு நிர்வாகிகள் செய்து உள்ளனர்.

Next Story