குளத்தில் குளிக்க சென்ற வாலிபர்களை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள் மறியல்


குளத்தில் குளிக்க சென்ற வாலிபர்களை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள் மறியல்
x
தினத்தந்தி 18 July 2019 10:45 PM GMT (Updated: 18 July 2019 7:27 PM GMT)

கறம்பக்குடி அருகே குளத்தில் குளிக்க சென்ற வாலிபர்களை உருட்டு கட்டையால் தாக்கியவர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியல் செய்தனர். இதனால் அப்பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள பில்லுவெட்டு விடுதி கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். இவரது மகன் முத்துகிருஷ்ணன் (வயது 27). அவரது உறவினர் மணிகண்டன் (25). இவர்கள் இருவரும் சம்பவத்தன்று ரெகுநாதபுரத்தில் உள்ள பசுங்குளத்திற்கு குளிக்க சென்றனர். அப்போது அங்கு சென்ற மருதன்கோன் விடுதியை சேர்ந்த சிவா, புவுன்ராஜ், முருகேசன் ஆகிய 3 பேரும் இங்கு ஏன் குளிக்க வந்தீர்கள், நீங்கள் யார் என கேட்டு தகராறு செய்துள்ளனர். மேலும் முத்துகிருஷ்ணனையும், மணிகண்டனையும் உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த முத்து கிருஷ்ணன் உயிருக்கு ஆபத்தான நிலையில், தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இதுகுறித்து கறம்பக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாலை மறியல்

இந்நிலையில், போலீசாரின் மெத்தன போக்கை கண்டித்தும், வாலிபர்களை தாக்கிய குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் நேற்று தாக்கப்பட்ட வாலிபர்களின் உறவினர்கள் கறம்பக்குடி அருகே உள்ள மருதன்கோன்விடுதி நால்ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கறம்பக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வாலிபர்களை தாக்கியவர்களை கைது செய்வதாக உறுதி அளித்தனர். இதையடுத்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் நால்ரோட்டில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இச்சம்பவத்தால் மருதன்கோன்விடுதி, ரெகுநாதபுரம் பகுதிகளில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story