பாட்டி வீட்டில் வளர்ந்த 2 சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை 10க்கும் மேற்பட்டவர்கள் வெறிச்செயல்


பாட்டி வீட்டில் வளர்ந்த 2 சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை 10க்கும் மேற்பட்டவர்கள் வெறிச்செயல்
x
தினத்தந்தி 18 July 2019 10:15 PM GMT (Updated: 18 July 2019 8:03 PM GMT)

பாட்டி வீட்டில் வளர்ந்த 2 சிறுமிகள் 10க்கும் மேற்பட்டவர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த சிறுமிகளுக்கு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

புதுச்சேரி, 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பெண்ணுக்கு திருமணம் ஆகி 2 பெண் குழந்தைகள் உள்ளன. முதல் குழந்தைக்கு 9 வயது, 2-வது குழந்தைக்கு 7 வயது. இந்தநிலையில் அந்த பெண்ணை விட்டு கணவர் பிரிந்து சென்று விட்டார்.

இதனால் வேலைக்காக புதுவைக்கு அந்த பெண் அடிக்கடி சென்று வந்தார். அப்போது புதுச்சேரியை சேர்ந்த தொழிலாளி ஒருவருடன் அந்த பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து குழந்தைகளை தனது தாயாரிடம் வீட்டில் விட்டு விட்டு அந்த தொழிலாளியுடன் கோரிமேட்டில் தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தார்.

இந்த நிலையில் பல மாதங்களுக்கு பிறகு குழந்தைகளை பார்க்க அந்த பெண் தனது தாயார் வீட்டுக்கு சென்றார். அவரை பார்த்ததும் சிறுமிகள் 2 பேரும் ஓடி வந்து கட்டி அணைத்து அழுதன. அப்போது அந்த குழந்தைகள் சிலரால் தங்களுக்கு நடந்த பாலியல் வன்கொடுமை குறித்து தெரிவித்து முறையிட்டனர். இதனால் செய்வதறியாமல் குழந்தைகளை அந்த பெண் தன்னுடனே அழைத்துக் கொண்டு சென்றார். கோரிமேட்டில் உள்ள அரசு பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தார்.

இந்த நிலையில் பள்ளியில் 9 வயது சிறுமி திடீரென மயங்கி விழுந்தார். அவரது தங்கையும் சோர்வுடன் காணப்பட்டார். இதனால் அந்த சிறுமிகள் இருவரும் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு டாக்டர்கள் நடத்திய சோதனையில் சிறுமிகள் இருவரும் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகி இருந்தது தெரியவந்தது.

உடனே இது குறித்து குழந்தைகள் நலக்குழுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நலக்குழுவின் தலைவர் ராஜேந்திரன் நேரில் சென்று அந்த சிறுமிகளிடம் விசாரித்தார். அப்போது சிறுமிகள் தங்கள் பாட்டி வீட்டில் இருந்த போது 10க்கும் மேற்பட்டவர்கள் பாலியல் வன் கொடுமை செய்ததாக தெரிவித்து கண்ணீர் விட்டனர்.

சம்பவம் நடைபெற்ற பகுதி விழுப்புரம் மாவட்டம் என்பதால் அங்குள்ள குழந்தைகள் நலக்குழுவுக்கு அறிக்கை அனுப்பி இதுகுறித்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க புதுவை குழந்தைகள் நலக்குழு தலைவர் ராஜேந்திரன் பரிந்துரைத்துள்ளார். தொடர்ந்து சிறுமிகள் 2 பேருக்கும் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தாயை பிரிந்து பாட்டி வீட்டில் இருந்த சிறுமிகளுக்கு நேர்ந்த இந்த கொடுமையான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story