ரூ.60 லட்சம் கேட்டு மிரட்டல்: கடத்தப்பட்ட டாக்டரின் 3½ வயது மகள் மீட்கப்பட்டது எப்படி? பரபரப்பு தகவல்கள்


ரூ.60 லட்சம் கேட்டு மிரட்டல்: கடத்தப்பட்ட டாக்டரின் 3½ வயது மகள் மீட்கப்பட்டது எப்படி? பரபரப்பு தகவல்கள்
x
தினத்தந்தி 20 July 2019 12:00 AM GMT (Updated: 19 July 2019 8:22 PM GMT)

கடத்தப்பட்ட டாக்டரின் 3½ வயது மகள் மீட்கப்பட்டது எப்படி? என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. சினிமா படம் எடுக்கவும், விரைவில் பணக்காரர்களாக மாறவும் ரூ.60 லட்சம் கேட்டு மிரட்டியது தெரிந்தது.

பூந்தமல்லி,

சென்னை அமைந்தகரை செனாய் நகர், செல்லம்மாள் தெருவை சேர்ந்தவர் அருள்ராஜ் (வயது 35). இவருடைய மனைவி டாக்டர் நந்தினி(33). இவர்களுடைய 3½ வயது மகள் அன்விகா, நேற்று முன்தினம் கடத்தப்பட்டார்.

நள்ளிரவில் சிறுமியை மீட்ட போலீசார், சம்பவம் தொடர்பாக நந்தினி வீட்டு வேலைக்கார பெண் அம்பிகா(32) மற்றும் முகமது கலிமுல்லா சேட்(33) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

கடத்தப்பட்ட சிறுமியை மீட்டது எப்படி? என்பது குறித்து அண்ணாநகர் போலீஸ் நிலையத்தில் கூடுதல் கமிஷனர் தினகரன், நிருபர்களிடம் கூறியதாவது:-

டாக்டரின் மகள் கடத்தப்பட்டதாக புகார் வந்த உடன், 7 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடினோம். இந்த வழக்கில் எங்களுக்கு பக்கபலமாக இருந்தது, கண்காணிப்பு கேமரா காட்சிகளும், செல்போன் சிக்னலும்தான்.

முகமது கலிமுல்லா சேட் செங்குன்றத்திலும், அம்பிகா பாடியிலும் வசித்து வந்தனர். இருவரும் திருமங்கலத்தில் உள்ள ஒரு உணவகத்தில் வேலை செய்து வந்தபோது பழக்கம் ஏற்பட்டுள்ளது. உணவகத்தில் வேலையை விட்டு நின்ற அம்பிகா, ஆன்-லைனில் வந்த விளம்பரத்தை பார்த்து நந்தினி வீட்டில் வேலைக்கு சேர்ந்தார்.

முகமது கலிமுல்லா சேட் ஆரம்பத்தில் ஒரு படத்தில் நடித்துள்ளார். சினிமா மோகம் கொண்ட அவர் மாடலிங்கும் செய்துள்ளார். குறும்படம் எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில் அம்பிகா, தற்போது தான் வசதியான டாக்டர் வீட்டில் வேலை செய்து வருவதாகவும், அவரது குடும்ப செலவுகள் குறித்தும் முகமது கலிமுல்லா சேட்டிடம் கூறி உள்ளார்.

இதனால் நாம் விரைவில் பணக்காரர்களாக மாறி வாழ்வில் செட்டில் ஆக வேண்டும். சொந்தமாக சினிமா படம் எடுக்க வேண்டும் என்றால் அவர்களது மகளை கடத்தி ரூ.60 லட்சம் கேட்டு மிரட்டலாம் என இருவரும் முடிவு செய்து உள்ளனர்.

அதன்படி பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த அன்விகாவை, கடற்கரைக்கு செல்லலாம் எனக்கூறி அம்பிகா வெளியே அழைத்து வந்து அங்கு தயாராக நின்ற முகமது கலிமுல்லா சேட்டின் காரில் ஏறி கோவளம் சென்று உள்ளார். அங்குள்ள ஒரு விடுதியில் இருவரையும் விட்டு, விட்டு செங்குன்றம் நோக்கி காரில் வந்தபோதுதான் அவரது செல்போன் சிக்னலை வைத்து அவரை மடக்கி பிடித்தோம். பின்னர் சிறுமியை மீட்டதுடன், அபிராமியையும் கைது செய்தோம். இவ்வாறு அவர் கூறினார்.

கைதான முகமது கலிமுல்லா சேட், அம்பிகா இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறுமியை கடத்த பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story