அத்திவரதர் தரிசன நெரிசலில் மேலும் ஒரு பக்தர் சாவு


அத்திவரதர் தரிசன நெரிசலில் மேலும் ஒரு பக்தர் சாவு
x
தினத்தந்தி 19 July 2019 11:30 PM GMT (Updated: 19 July 2019 8:26 PM GMT)

காஞ்சீபுரத்தில் அத்திவரதர் தரிசன நெரிசலில் சிக்கி மேலும் ஒரு பக்தர் பரிதாபமாக இறந்தார்.

காஞ்சீபுரம்,

108 திவ்ய தேசங்களில் ஒன்று காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவில். இந்த கோவிலில் கடந்த 1-ந் தேதி முதல் அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். தினமும் ஏராளமான பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அத்திவரதரை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். 100-க்கும் அதிகமான பக்தர்கள் நெரிசலில் சிக்கி மயக்கம் அடைந்தனர். அவர்களில் பலர் சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த நடராஜன் (வயது 61), ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த கங்காலட்சுமி (47), சென்னை ஆவடியை சேர்ந்த நாராயணி (55), சேலத்தை சேர்ந்த ஆனந்தவேல் (50) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

19-வது நாளான நேற்று அத்திவரதர் நீல நிற பட்டாடையில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். நேற்றும் அத்திவரதரை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். நேற்று மதியம் நெரிசலில் சிக்கி சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த ஆறுமுகம் (42) மயக்கம் அடைந்தார். உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கூட்ட நெரிசல் காரணமாக ஆம்புலன்ஸ் வருவதில் தாமதம் ஏற்பட்டது. அதன் பின்னர் அவர் சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சின்ன காஞ்சீபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

நேற்று மதியம் கடும் வெயில் வாட்டியதால் அத்திவரதரை தரிசிக்க வந்த பக்தர்கள் அவதிக்கு உள்ளானார்கள். இந்த நிலையில் வரதராஜ பெருமாள் கோவில் குளம் அருகே பதிக்கப்பட்டிருந்த கற்களில் நடந்து சென்ற 5 வயது சிறுமிக்கு வெப்பம் காரணமாக காலில் கொப்புளம் ஏற்பட்டது. இதுகுறித்து ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்திலும் ஆம்புலன்ஸ் வர தாமதம் ஆனது. அதன் பின்னர் அந்த சிறுமி சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

காஞ்சீபுரத்தை சேர்ந்த கந்தகுருசித்தர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

அத்திவரதரை தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசித்துவிட்டு செல்கின்றனர். இவ்வாறு தரிசனம் செய்யும்போது, அவர்களுக்கு அந்த இடத்தில், குடிநீர் கூட தரவில்லை என்று கேள்விப்பட்டேன். தமிழக அரசு உடனடியாக அவர்களுக்கு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று இந்த நேரத்தில் கேட்டு கொள்கிறேன். நெரிசலில் சிக்கி மரணம் அடைந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story