தஞ்சை அருகே, இந்து முன்னணியினர் சாலை மறியல் - மணல் கடத்தலை தடுக்க வலியுறுத்தல்


தஞ்சை அருகே, இந்து முன்னணியினர் சாலை மறியல் - மணல் கடத்தலை தடுக்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 19 July 2019 10:45 PM GMT (Updated: 19 July 2019 11:03 PM GMT)

மணல் கடத்தலை தடுக்க வலியுறுத்தி தஞ்சை அருகே இந்து முன்னணியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,

தஞ்சையை அடுத்த வெண்ணலோடை, வடகால் கிராமங்கள் வழியாக செல்லும் வெண்ணாற்றில் அனுமதியின்றி மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியை மூட வலியுறுத்தியும், ஆறுகளில் இருந்து மணல் கடத்தப்படுவதை தடுக்க கோரியும் இந்து முன்னணி சார்பில் தஞ்சை பள்ளியக்கிரஹாரத்தில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதனால் பள்ளியக்கிரஹாரத்தில் வெண்ணாற்றுப்பாலம் அருகே இந்து முன்னணியினரும், வெண்ணலோடை, வடகால் கிராமங்களை சேர்ந்த மக்களும் நேற்றுகாலை ஒன்று திரண்டனர். இதை அறிந்த நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையில் ஏராளமான போலீசார் விரைந்து சென்று இந்து முன்னணியினரிடமும், கிராம மக்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அவர்கள் வெண்ணாற்றில் செயல்படும் மணல் குவாரியை நேரில் பார்வையிட்டு மணல் அள்ளுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என போலீசாரிடம் தெரிவித்தனர். இதையடுத்து வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு சீதாராமன் தலைமையில் ஏராளமான போலீசார், வெண்ணாற்றில் அனுமதியின்றி செயல்பட்டு வரும் மணல் குவாரியை பார்வையிட்டனர்.

மணல் அள்ளுவதற்கு வசதியாக ஆற்றுக்குள் புதிதாக சாலை அமைக்கப்பட்டு இருப்பதையும், இதற்காக கரைகளில் நின்ற தேக்கு மரங்கள் வெட்டப்பட்டு இருப்பதையும் போலீசார் பார்த்து அதிர்ச்சி அடைந்த னர். மேலும் அவர்கள், ஆற்றின் அருகே உள்ள விளை நிலத்தில் மலைபோல் மணல் குவிக்கப்பட்டு இருந்ததையும் பார்த்தனர். ஆற்றில் அள்ளப்படும் மணல், விளை நிலங்களில் கொட்டப்பட்டு அங்கிருந்து லாரிகளில் கடத்தப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.

யாருக்கு சொந்தமான இடத்தில் மணல் கொட்டப்பட்டு இருக்கிறது? யாருடைய உதவியுடன் மணல் கடத்தப்பட்டு வருகிறது? என்பது குறித்து கிராமமக்களிடம் போலீசார் கேட்டறிந்தனர். பின்னர் அவர்கள், இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கிராமமக்களிடம் உறுதி அளித்தனர். இந்தநிலையில் சக்கரசாமந்தம் அருகே பைபாஸ் சாலையில் இந்து முன்னணியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள், ஆளும்கட்சியினர் உதவியுடன் வெண்ணாற்றில் அனுமதியின்றி செயல்படும் மணல் குவாரியை மூட வேண்டும். குவாரியில் இருந்து மணல் கடத்துபவர்களை கைது செய்ய வேண்டும். மணல் கடத்தலுக்கு துணை போகும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். இதை அறிந்த போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து மறியலை கைவிட்ட இந்து முன்னணியினர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஈசானசிவம் தலைமையில் நகர தலைவர் பாலமுருகன், நகர செயலாளர் சக்திவேல், நகர துணைத் தலைவர் முகில்குமார், நகர பொறுப்பாளர் ஆதி ஆகியோர் முன்னிலையில் கலெக்டர் அண்ணாதுரையை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

இந்த மனுவை படித்து பார்த்த அவர், இது தொடர்பாக ஏற்கனவே புகார் வந்துள்ளது எனவும், மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும், விரைவில் 2 பேர் மீது குண்டர் சட்டம் பாயும் எனவும் உறுதி அளித்தார்.

Next Story