பெண் மர்ம சாவு: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்


பெண் மர்ம சாவு: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 20 July 2019 11:30 PM GMT (Updated: 20 July 2019 7:10 PM GMT)

கொடைரோடு அருகே மர்மமான முறையில் இறந்த பெண்ணின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொடைரோடு,

கொடைரோடு அருகே உள்ள காமலாபுரத்தை சேர்ந்தவர் ஜான் ஜோசப். இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி கிரேசிமேரி (வயது 34). இவர்களுக்கு லிவின் (10) என்ற மகன் உள்ளான். நேற்று முன்தினம் வீட்டில் கிரேசிமேரி மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் கிரேசிமேரியை மீட்டு சிகிச்சைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதையடுத்து அவருடைய உடல் பிரேத பரிசோதனை அறையில் வைக்கபட்டுள்ளது.

இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீஸ் நிலையத்தில் கிரேசிமேரி தந்தை சேசுராஜ் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் மர்ம சாவு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே கிரேசிமேரி சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி அவருடைய உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் அம்மையநாயக்கனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாண்டியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே அவர் இறந்ததற்கான காரணம் குறித்து தெரியவரும் என்று தெரிவித்தனர். இதை ஏற்றுக்கொண்ட உறவினர்கள் கிரேசிமேரியின் உடலை பிரேத பரிசோதனை செய்து வாங்கி சென்றனர்.

Next Story