மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல் மழை: அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு, விவசாயிகள் மகிழ்ச்சி


மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல் மழை: அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு, விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 20 July 2019 10:45 PM GMT (Updated: 20 July 2019 7:29 PM GMT)

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல்மழை பெய்து வருகிறது. இதனால் அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தளி,

உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் அமராவதி அணை உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை நீராதாரமாக கொண்ட இந்த அணைக்கு ஆறுகள் மற்றும் ஓடைகள் மூலமாக மழைக்காலங்களில் நீர்வரத்து ஏற்படுகிறது. அதனை அடிப்படையாகக் கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுமார் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகின்றன.

பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு அமராவதி ஆற்றிலும் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு பிரதான கால்வாய் மூலமாகவும் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அத்துடன் சுற்றுப்புற கிராம மக்கள் பயன்பெறும் வகையில் அமராவதி ஆற்றை ஆதாரமாகக்கொண்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வரப்படுகிறது.

கடந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழை கைகொடுத்ததால் அணையும் 3 முறைக்கும் மேலாக அதன் முழு கொள்ளளவை எட்டியது.

அதைத்தொடர்ந்து அணையில் உள்ள 9 கண் மதகுகள் வழியாக குளம், குட்டைகள் மற்றும் பாசனத்திற்கு ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் ஆற்றை மையமாகக்கொண்ட குடிநீர் திட்டங்களும் உயிர் பெற்றது. மேலும் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்து வந்தது. விவசாயிகளும் நெல் சாகுபடியில் ஈடுபட்டு வந்தனர்.

ஆனால் கடந்தாண்டு இறுதியில் வடகிழக்கு பருவமழை ஏமாற்றத்தை அளித்தது. இதன் காரணமாக கோடை காலத்திற்கு முன்பாகவே வறட்சி தாண்டவம் ஆடியது. இதனால் அமராவதி அணையின் முக்கிய நீர் ஆதாரங்களான பாம்பாறு, தேனாறு, சின்னாறு மற்றும் அதன் துணை ஆறுகளிலும் நீர்வரத்து வெகுவாக குறைந்துவிட்டது. அணைக்கும் குறைந்தளவே நீர்வரத்து இருந்து வந்தது.

இதனால் பாசனத்திற்கு குறித்த காலத்தில் தண்ணீர் வினியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. அத்துடன் குடிநீர் திட்டங்களும் முடங்கிப்போனது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அவதிக்குள்ளாகி வந்தனர்.

இந்த நிலையில் கேரள மாநிலம் மூணாறு மற்றும் மறையூர் உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. கடந்த சில நாட்களாக அங்கு சாரல் மழையும் பெய்து வருகிறது. இதனால் அமராவதி அணையின் நீராதாரங்களில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக நேற்று காலையில் வினாடிக்கு 462 கன அடியாக இருந்த நீர்வரத்து மதியம் 12 மணியளவில் 860 கன அடியாக அதிகரித்தது. மேலும் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் வானம் தொடர்ந்து மேகமூட்டமாக காணப்படுவதுடன் அவ்வப்போது மழை பெய்து வருவதாக தெரிகிறது. இதன் காரணமாக அணைக்கு அதிகளவில் நீர்வரத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் நிலவுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அணைக்கு ஏற்படுகின்ற நீர்வரத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

நேற்று காலை நிலவரப்படி அணையில் 36.42 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 462 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 8 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

Next Story