பெங்களூருவில் விற்க முயன்ற 8 யானை தந்தங்கள் பறிமுதல் தமிழகத்தை சேர்ந்த 4 பேர் கைது


பெங்களூருவில் விற்க முயன்ற 8 யானை தந்தங்கள் பறிமுதல்  தமிழகத்தை சேர்ந்த 4 பேர் கைது
x
தினத்தந்தி 20 July 2019 9:45 PM GMT (Updated: 20 July 2019 8:01 PM GMT)

பெங்களூருவில் விற்க முயன்ற 8 யானை தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற இளநிலை செயற்பொறியாளர் உள்பட தமிழகத்தை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

பெங்களூரு,

பெங்களூரு ஜாலஹள்ளியில் உள்ள காளிங்கராவ் சர்க்கிளில் மர்மநபர்கள் 2 பேர் சாக்கு பையில் யானை தந்தங்களை வைத்து கொண்டு நிற்பதாக ஜாலஹள்ளி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீசார் விரைந்து சென்று அங்கு நின்ற 2 பேரை பிடித்து அவர்கள் வைத்திருந்த சாக்குப்பையை திறந்து பார்த்தனர்.

அதன் உள்ளே யானை தந்தங்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் பிடித்து கைது செய்தனர். மேலும் அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து மொத்தம் 8 யானை தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கைதான 4 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணையில் அவர்கள் தமிழ்நாடு கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுபாளையத்தை சேர்ந்த உன்னி கிருஷ்ணன் (வயது 35), சென்னை அனகாபுத்தூரை சேர்ந்த ஜெயசீலன் (38), சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த மாதேஸ்வரன் (59), ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த விஜய் (37) என்பது தெரியவந்தது. இதில் மாதேஸ்வரன் மின்வாரியத்தில் இளநிலை செயற்பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றிருப்பதும் தெரியவந்தது.

மேலும் உன்னிகிருஷ்ணன், ஜெயசீலன் ஆகியோரிடம் மாதேஸ்வரன், விஜய் ஆகியோர் யானை தந்தங்களை கொடுத்து விற்பனை செய்ய கூறியதும், இதையடுத்து அவர்கள் 2 பேரும் பெங்களூரு வந்து விற்க முயன்றபோது போலீசாரிடம் சிக்கியதும் தெரியவந்தது. இதுகுறித்து ஜாலஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story