பட்டுப்போன தென்னைகள் வெட்டி சாய்ப்பு


பட்டுப்போன தென்னைகள் வெட்டி சாய்ப்பு
x
தினத்தந்தி 21 July 2019 10:45 PM GMT (Updated: 21 July 2019 9:22 PM GMT)

சிங்கம்புணரி அருகே பட்டுப்போன தென்னை மரங்கள் அடியோடு வெட்டி சாய்க்கப்பட்டது. அவை மிகக் குறைந்த விலைக்கு கேட்கப்படுவதால் விவசாயிகள் கவலையடைந்து வருகின்றனர்.

எஸ்.புதூர்,

மாவட்டத்தில் ஆண்டு தோறும் முறையாக பருவமழை பெய்து, இங்குள்ள கண்மாய்கள் முற்றிலும் நிரம்பினால் மட்டுமே விவசாயம் நடைபெறும் என்ற நிலை உருவாகிவிட்டது. தற்போது மாவட்டம் மிகவும் வறட்சி மாவட்டமாக இருந்து வருகிறது. கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக முறையாக விவசாயம் நடைபெறவில்லை. அவ்வப்போது பெய்ய வேண்டிய பருவமழை ஓரளவு பெய்ததால் ஒரு சில இடங்களில் குடிதண்ணீர் பற்றாக்குறை இல்லாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் கடந்த ஆண்டு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழையில்லாமல் போனதால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து, சில இடங்களில் குடிதண்ணீருக்கு கூட கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் தண்ணீருக்காக பல கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தண்ணீர் பிடித்து வந்தனர். இளையான்குடி, மானாமதுரை, சிவகங்கை, திருப்பத்தூர், சிங்கம்புணரி உள்ளிட்ட பகுதிகளில் சில இடங்களில் குடிதண்ணீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து அந்த பகுதி மக்கள் குடிதண்ணீரை விலை கொடுத்து வாங்கி வருகின்றனர்.

இந்த வறட்சி மக்களை மட்டுமல்லாமல் விலங்குகளையும் கடுமையாக பாதித்தது. இன்னும் சில இடங்களில் கிணற்று பாசனத்தின் மூலம் வளர்ந்த மரங்கள், செடிகள் உள்ளிட்டவைகள் வறட்சி காரணமாக பட்டுப்போன நிலையில் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பிரான்மலை, எஸ்.புதூர் உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்ததால், அந்த பகுதிகள் பசுமையாக காணப்பட்டன.

இதையடுத்து இந்த பகுதியில் சில விவசாயிகள் தங்களது கிணற்று பாசனத்தின் மூலம் பூக்கள், தென்னை, வாழைகள் உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டு வந்தனர். இந்நிலையில் தற்போது ஏற்பட்ட கடும் வறட்சி காரணமாக இவைகள் முற்றிலும் கருகி போனதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். சிங்கம்புணரி அருகே எஸ்.புதூர் ஒன்றியத்திற்குட்பட்ட செட்டிக்குறிச்சி பகுதியில் கிணற்று பாசனத்தில் நடப்பட்டு நன்றாக வளர்ந்த தென்னைகள் முற்றிலும் பட்டுப்போனதால், அவை வெட்டி சாய்க்கப்பட்டு வருகின்றன.

அவற்றை செங்கல் சூளைக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் அந்த மரங்களின் விலையை வியாபாரிகள் மிகவும் குறைந்த விலைக்கு கேட்பதால், விவசாயிகள் மிகுந்த கவலைடைந்துள்ளனர். இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:- கடந்த 10ஆண்டுகளாக கிணற்று பாசனத்தின் மூலம் நூற்றுக்கணக்கில் தென்னைகள் வளர்த்து வருகிறோம்.

கடந்த சில வருடங்களாக நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக தென்னைகள் பட்டுப்போய்விட்டன. இதையடுத்து அவற்றை வெட்டுவதற்கு சம்பந்தப்பட்ட வியாபாரிகளிடம் அனுகிய போது அவர்கள் ஒரு மரத்திற்கு ரூ.100 மட்டும் தருவதாக கூறுகின்றனர். தென்னைகளை வளர்க்க பெரும் செலவு செய்துள்ள நிலையில், பட்டுப்போன தென்னைகளை மிகக்குறைந்த விலைக்கு வியாபாரிகள் கேட்பதால் வேறு வழியில்லாமல் கொடுப்பது வேதனையாக உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story