சேத்தியாத்தோப்பில் லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலி கணவன் கண்முன்னே பரிதாபம்


சேத்தியாத்தோப்பில் லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலி கணவன் கண்முன்னே பரிதாபம்
x
தினத்தந்தி 22 July 2019 10:00 PM GMT (Updated: 22 July 2019 8:27 PM GMT)

சேத்தியாத்தோப்பில் கணவன் கண்முன்னே லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பரிதாபமாக இறந்தார்.

சேத்தியாத்தோப்பு, 

சேத்தியாத்தோப்பு அருகே ஓடக்கநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகவேல். இவருடைய மனைவி நிலவழகி (வயது 27). இவர்கள் 2 பேரும் சொந்த வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் சேத்தியாத்தோப்புக்கு வந்தனர்.

பின்னர் அங்கு வேலை முடிந்ததும் அதே மோட்டார் சைக்கிளில் அவர்கள் ஊருக்கு திரும்பினர். சேத்தியாத்தோப்பு சென்னை-கும்பகோணம் சாலையில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக 2 பேரும் மோட்டார் சைக்கிளுடன் தவறி சாலையில் விழுந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியின் பின்சக்கரத்தில் நிலவழகி சிக்கினார்.

இதில் நிலவழகி மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது. இந்த விபத்தில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே நிலவழகி பரிதாபமாக இறந்தார்.

தனது கண் முன்னே மனைவி துடிதுடித்து இறந்தை பார்த்த முருகவேல் கதறி அழுதார். இது குறித்த தகவலின் பேரில் சேத்தியாத்தோப்பு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, நிலவழகியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story