கருங்கல் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவர் பலி


கருங்கல் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவர் பலி
x
தினத்தந்தி 22 July 2019 10:45 PM GMT (Updated: 22 July 2019 8:38 PM GMT)

கருங்கல் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவர் பலியானார்.

கருங்கல்,

கருங்கல் அருகே உள்ள தொழிக்கோடு தோரணத்துவிளையை சேர்ந்தவர் மணிகண்டன். இவருடைய மகன் அருண்(வயது 22).

இவர் அப்பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். மேலும், வறுமையின் காரணமாக கல்லூரி விடுமுறை நாட்களில் அருண் சமையல் வேலைக்கு செல்வது வழக்கம்.

பலி

அதுபோல் விடுமுறை நாளான நேற்று முன்தினம் மண்டைக்காடு பகுதியில் நடைபெற்ற ஒரு விழாவில் சமையல் வேலைக்கு சென்றார். வேலை முடிய நள்ளிரவு ஆகிவிட்டது. நள்ளிரவில் அவர், தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். புனத்திட்டைவிளை பகுதியில் வந்தபோது, திடீரென மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட அருண் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து நள்ளிரவில் நடந்ததால் யாருக்கும் தெரியவில்லை. காலையில் அந்த வழியாக சென்றவர், விபத்தில் வாலிபர் இறந்து கிடப்பதை பார்த்து கருங்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அருணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story