மாற்று இடம், வேலைவாய்ப்பு வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் கோட்டாட்சியர் தலைமையில், முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு


மாற்று இடம், வேலைவாய்ப்பு வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் கோட்டாட்சியர் தலைமையில், முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு
x
தினத்தந்தி 22 July 2019 11:11 PM GMT (Updated: 22 July 2019 11:11 PM GMT)

மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளி கிராமத்தில் மாற்று இடம் மற்றும் வேலைவாய்ப்பு வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில், முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

மீஞ்சூர்,

மீஞ்சூர் அருகே காட்டுப்பள்ளி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நிலங்களை கையகப்படுத்தி கிராமத்தை சுற்றி தனியார் கப்பல் கட்டும் தளம் மற்றும் துறைமுகம் கட்டி சுற்றுச்சுவர் எழுப்பினர்.

இதனால் அப்பகுதியில் காற்றோட்டமில்லாமல், பொதுமக்கள் அவதியுறுவதாக கூறப்படுகிறது. மேலும், இதனால் பொதுமக்களுக்கு பல்வேறு வகையில் இடையூறுகள் இருப்பதாக கூறி இப்பகுதியை விட்டு வெளியேறவும் முடிவு எடுத்து இருந்தனர். இந்நிலையில் நேற்று அப்பகுதி கிராம மக்கள் ஒன்று கூடி குடியிருப்பு மக்களுக்கு மாற்று இடம் வழங்கவும், அனைத்து குடும்பத்தினருக்கும் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

தகவலறிந்த பொன்னேரி தாசில்தார் எட்வர்ட்வில்சன், துணை தாசில்தார் செல்வகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

பின்னர் பொதுமக்களை சமாதானப்படுத்தியதையடுத்து, பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதன் பின்னர், பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் நந்தகுமார் தலைமையில், நடந்த முத்தரப்பு சமாதான பேச்சுவார்த்தை கூட்டத்தில், தனியார் கப்பல் கட்டும் தளம் மற்றும் துறைமுக அதிகாரிகள், தாசில்தார் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படுவதற்கான உடன்பாடு எழுத்துப்பூர்வமாக உறுதிமொழி அளிக்கப்பட்டது. பின்னர் பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story