ரூ.50 லட்சம் மாமூல் கேட்டு லாரி அதிபர்களை மிரட்டிய ரவுடியின் கூட்டாளிகள் கைது


ரூ.50 லட்சம் மாமூல் கேட்டு லாரி அதிபர்களை மிரட்டிய ரவுடியின் கூட்டாளிகள் கைது
x
தினத்தந்தி 22 July 2019 11:21 PM GMT (Updated: 22 July 2019 11:21 PM GMT)

ரூ.50 லட்சம் மாமூல் கேட்டு லாரி அதிபர்களை மிரட்டிய பிரபல ரவுடியின் கூட்டாளிகளை போலீசார் கைது செய்தனர்.

செங்குன்றம்,

எண்ணூரை சேர்ந்தவர் தனசேகர். பிரபல ரவுடி. இவருடைய கூட்டாளிகளான மாதவரத்தை சேர்ந்த கிரி (வயது 35), கொசப்பேட்டையை சேர்ந்த கார்த்திக் (33), சூளையை சேர்ந்த கார்த்திகேயன் (38) ஆகியோர் செங்குன்றம் வடகரை மைதானத்தில் காரில் அமர்ந்து கொண்டு, அப்பகுதியில் உள்ள லாரி அதிபர்களுக்கு போன் செய்து, “நீங்கள் லாரியில் திருட்டு மணல் அள்ளி செல்கிறீர்கள். இதை வெளியே சொல்லாமல் இருக்க வேண்டுமானால் எங்களுக்கு ரூ.50 லட்சம் மாமூல் தரவேண்டும்” என மிரட்டினர்.

இது குறித்து புழல் உதவி கமிஷனர் ரவிக்கு புகார் சென்றது. உடனடியாக அவர், மாமூல் கேட்டு மிரட்டியவர்களை பிடிக்க தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

அதன்படி இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பலராமன், தலைமை காவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, நல்லுசாமி ஆகியோர் வடகரை பகுதிக்கு விரைந்தனர். போலீசாரை கண்டதும் கிரி, கார்த்திக், கார்த்திகேயன் ஆகியோர் காரில் ஏறி தப்பி சென்றனர்.

எனினும் போலீசார் அவர்களை தங்களது காரில் சினிமா பாணியில் விரட்டிச்சென்று, பாடியநல்லூர் சிக்னல் அருகே மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அவர்கள் பயன்படுத்திய சொகுசு கார், 2 கத்திகள், 6 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ரவுடி தனசேகர் கூறியதால்தான் லாரி அதிபர்களிடம் பணம் வாங்க சென்றதாக அவர்கள் கூறினர். இதுகுறித்து கைதான 3 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Next Story