கஞ்சா வியாபாரிகளிடம் பல லட்சம் ரூபாய் வசூல்: துணை போலீஸ் சூப்பிரண்டு உள்பட 3 பேர் மீது வழக்கு


கஞ்சா வியாபாரிகளிடம் பல லட்சம் ரூபாய் வசூல்: துணை போலீஸ் சூப்பிரண்டு உள்பட 3 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 22 July 2019 10:00 PM GMT (Updated: 22 July 2019 11:35 PM GMT)

கஞ்சா வியாபாரிகளிடம் பல லட்சம் ரூபாய் வசூல் செய்த போதைப்பொருள் தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம், 

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்தவர் குமார், கஞ்சா வியாபாரி. இவருடைய மனைவி ராணி. இவர் சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் ஒன்று கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

என்னுடைய கணவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் என்னை கஞ்சா விற்பனை செய்யுமாறு சேலம் போதைபொருள் தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு குமார் தொடர்ந்து வற்புறுத்தினார்.

இதையடுத்து நான் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டேன். இதற்காக அவர் என்னிடம் மாதந்தோறும் ரூ.25 ஆயிரம் வரை மாமூல் பெற்று வந்தார். இதற்கிடையில் கூடுதல் மாமூல் என்னிடம் கேட்டதால் நான் ஆந்திராவுக்கு சென்றுவிட்டேன்.

குழந்தைகளை என்னுடைய தாய் கவனித்து வந்தார். ஆனால் அவர் மீது கஞ்சா விற்றதாக பொய் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விட்டனர். மேலும் என் மீதும் வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தா மாமூல் கேட்டு துன்புறுத்துகிறார். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு சந்திரமவுலி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் ராணி உள்பட பல கஞ்சா வியாபாரிகளிடம் பல லட்சம் ரூபாயை துணை போலீஸ் சூப்பிரண்டு குமார் மற்றும் இன்ஸ்பெக்டர் சாந்தா ஆகியோர் வசூல் செய்தது தெரியவந்தது.

இதில், கஞ்சா வியாபாரிகள் பலர் துணை போலீஸ் சூப்பிரண்டு குமாரின் அக்காள் கணவரான தஞ்சாவூர் மாவட்ட கருவூல கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி வங்கிக்கணக்கில் செலுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு குமார், இன்ஸ்பெக்டர் சாந்தா மற்றும் கருவூல கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story