ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீருடன் 2-வது ரெயில் சென்னை சென்றது


ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீருடன் 2-வது ரெயில் சென்னை சென்றது
x
தினத்தந்தி 23 July 2019 11:15 PM GMT (Updated: 23 July 2019 6:32 PM GMT)

ஜோலார்பேட்டையில் இருந்து 25 லட்சம் லிட்டர் தண்ணீருடன் 2-வது ரெயில் நேற்று சென்னை சென்றது.

ஜோலார்பேட்டை,

சென்னை நகர மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்காக வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரெயில் மூலம் குடிநீர் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரூ.66 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

அதன்படி கடந்த 12-ந் தேதி ஜோலார்பேட்டையில் இருந்து 25 லட்சம் லிட்டர் தண்ணீர் ரெயில் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு மக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்வதற்காக 2-வதாக 50 டேங்கர்கள் கொண்ட புதிய ரெயில் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்பட்டது.

இந்த ரெயில் சேலம் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு அதனை சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் 5-வது யார்டுக்கு அந்த ரெயில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் வந்தடைந்தது.

அதன்பிறகு தயாராக இருந்த 45 ஊழியர்கள், டேங்கர்களில் தண்ணீர் நிரப்பும் பணியை மேற்கொண்டனர். டேங்கருக்கு 50 ஆயிரம் லிட்டர்கள் என்ற அளவில் 50 டேங்கர்களில் 25 லட்சம் லிட்டர் தண்ணீர் நிரப்பப்பட்டது. அதிகாலை 5.10 மணி முதல் காலை 8.10 மணி வரை 3 மணி நேரம் இந்த பணி நடந்தது.

அதைத் தொடர்ந்து நீர் அளவீடு செய்யப்பட்டு, குடிநீர் தரம் ஆய்வு செய்யப்பட்டு காலை 9.40 மணிக்கு ஜோலார்பேட்டையில் இருந்து ரெயில் புறப்பட்டது. இந்த ரெயில் நேற்று மதியம் 2.15 மணிக்கு சென்னை வில்லிவாக்கம் ரெயில் நிலையம் சென்ற டைந்தது. பின்பு அங்கு அமைக்கப்பட்டு இருந்த சிறப்பு குழாய்கள் மூலம் ரெயில் டேங்கர்களில் இருந்த தண்ணீர் கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு இருந்து சென்னை மக்களுக்கு வினியோகம் செய்யப்படும்.

படிப்படியாக ஒரு கோடி லிட்டர் குடிநீர் சென்னைக்கு கொண்டு வர நடவடிக்கைகள் எடுத்து வருவதாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story